வங்கதேச புயல் பலி 10,000?: ரெட் கிரசென்ட்
டாக்கா: வங்கதேசத்தை சிதறடித்துள்ள சிதர் புயலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 10,000யைத் தாண்டும் என ரெட் கிரசென்ட் சொசைட்டி தெரிவித்துள்ளது.
சிதர் புயலால் வங்கதேசத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. சுழற்றியடித்த சூறாவளிப் புயலில் சிக்கி இதுவரை 3,000 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். ஏராளமான மக்களை காணவில்லை. பெரும் பொருட் சேதமும் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ரெட் கிரசென்ட் சொசைட்டியின் செயலாளர் முகமது அயூப் மியா கூறுகையில்,
கடற்கரைப் பகுதிகளில் தோண்ட தோண்ட பிணங்கள் கிடைக்கின்றன. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏராளமானோர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிக்க கூட தண்ணீர் இல்லை. குழந்தைகளை வைத்துள்ளவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். சாப்பாடு இல்லாமல் 3 நாட்களுக்கு மேலாக பட்டினி கிடக்கிறார்கள்.
இந்த புயலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000யை தொட்டு விடும் என்றார்.
புயல் தாக்கிய பகுதிகளில் இன்னும் மின் விநியோகம், தகவல் தொடர்பு இல்லை. பாகேர்ஹட் மாவட்டத்தில் உள்ள துல்பர்ச்சார் தீவில் 5,000 மீனவர்கள் வசித்து வருகின்றனர். ஆனால் அந்தத் தீவுக்கும் நாட்டின் இதர பகுதிகளுக்கும் இடையே கடந்த புதன்கிழமை முதல் தகவல் தொடர்பு சுத்தமாக இல்லை. எனவே அந்த மீனவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை.
இந்தியா உட்பட பலநாடுகள் உதவிக்கரம்:
புயல் தாக்கிய வங்க தேசத்திற்கு இந்தியாவின் சார்பில் உணவுப் பொருட்கள், மருந்துகள், பால் பவுடர், ஸ்வெட்டர்கள் மற்றும் தற்காலிக கூடாரங்கள், முதலுதவி பொருட்கள் அனுப்பி வைக்கப்படவிருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
இது தவிர யுனிசெப், ஐ.நா, அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின் உட்பட பல நாடுகள் அத்தியாவசிய பொருட்களுடன் தங்கள் மீட்பு குழுவினரை வங்க தேசத்திற்கு அனுப்பி வைத்துள்ளன.












Click it and Unblock the Notifications