மருத்துவ மாணவர்களின் பட்டினி போராட்டம் தொடர்கிறது

டாக்டர் படிப்பை முடிப்போர் கட்டாயம் ஒரு ஆண்டுக்கு கிராமப்புற மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்ற முடிவை மத்திய சுகாதாரத் துரை எடுத்துள்ளது. மேலும் மருத்துவப் படிப்பை ஆறரை ஆண்டுகளாக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் பயின்று வரும் எம்.பி.பி.எஸ். மாணவர்கள் இந்த முடிவுகளை சுகாதாரத் துறை கைவிடக் கோரி தொடர் பட்டினிப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
3வது நாளாக இன்றும் போராட்டம் தொடர்ந்தது. தமிழகத்தில் உள்ள 14 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர்கள் இன்றும் உண்ணாவிரதம் இருந்தனர். வகுப்புகளையும் அவர்கள் புறக்கணித்தனர்.
மருத்துவ மாணவர்களின் போராட்டத்தில் சூழ்ச்சி உள்ளதாகவும், சிலர் பின்னாலிருந்து தூண்டி விடுவதாகவும் பாமக குற்றம் சாட்டியுள்ளது. அதேசமயம், பெரும்பாலான அரசியல் கட்சிகள் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி ஆகியவை மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், தளவாய் சுந்தரம், எம்.எல்.ஏ சேகர்பாபு ஆகியோர் அடங்கிய குழு சென்னையில் உண்ணாவிரதம் இருந்து வரும் மாணவர்களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
இதேபோல, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமாரும் மாணவர்களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோரும் மாணவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
மாணவர்களை சந்தித்த சரத்குமார் அவர்களிடையே பேசுகையில், இந்தப் பிரச்சினைக்கு மத்திய, மாநில அரசுகள் சுமூகத் தீர்வைக் காண முன்வர வேண்டும். மாணவர்களின் எதிர்காலம் மற்றும் படிப்பைக் கருதி விரைவில் இந்த விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.
தங்களது எம்.பி.பி.எஸ். படிப்பு ஆறரை ஆண்டுகளாக உயர்த்தக் கூடாது என்று மாணவர்கள் கோருகின்றனர். இதை அரசு ஏற்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications