இந்தோனேஷியாவில் தொடர் நிலநடுக்கம்: 3 பேர் பலி
ஜகார்தா: இந்தோனேஷியாவில் அடுத்தடுத்து நிகழ்ந்த 2 நிலநடுக்கத்தால் 3 பேர் உயிரிழந்தனர். 45க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். நிலநடுக்கம் குறித்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மத்திய இந்தோனேஷியாவின் சும்பவா தீவிலிருந்து வடமேற்கு திசையில் 30 மைல் தொலைவில் ராபா என்ற இடத்தில் நேற்று நள்ளிரவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட 4 மணி நேரம் கழித்து அதே பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. 2வது முறையாக ஏற்பட்ட நிலநடுக்கம் முதலில் நிகழ்ந்ததை விட மோசமாக இருந்தது. இதன் அளவு ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானது. இதனால் சும்பாவா தீவுகளில் உள்ள கட்டடங்கள் பயங்கரமாக ஆடின.
சும்பாவா தீவு சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் இடமாகும். இந்த நிலநடுக்கத்தால் பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன. பிமா என்ற மாவட்டத்தில் ஒரு மருத்துவமனை இடிந்து விழுந்தது. கடலோர தீவில் ஏற்பட்ட பூகம்பத்தால் சுனாமி வர வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.