புகை பிடிப்பவர்களுக்கு வழுக்கை விழும் - ஆய்வு

புகை பிடிப்பதால் புற்று நோய் வரும், சுவாசக் கோளாறுகள் வரும், நரம்புத் தளர்ச்சி வரும், ஆண்மைக் குறைவு ஏற்படும் என்பது பொதுவான அபாயங்கள். ஆனால் இப்போது புகை பிடிப்பதால் வழுக்கைத் தலை ஏற்படும் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
புகை பிடிக்கும் பழக்கம் கொண்ட ஆண்களில் மூன்றில் இரண்டு பங்கு பேருக்கு தலை வழுக்கை ஏற்படுகிறதாம். அவர்களின் செக்ஸ் ஹார்மோன்களில் பாதிப்பு ஏற்படுவதால்தான் இந்த வழுக்கை பிரச்சினை வருவதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
புகை பிடிப்பதால் விரைவிலேயே முடி கொட்டுவதாகவும், வழுக்கை விழுவதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. புகை பிடிக்காதவர்களை விட இவர்களுக்கே விரைவில் வழுக்கை ஏற்படுவதாகவும் அது கூறுகிறது.
தைவான் நாட்டின் தலைநகர் தைபேயில் உள்ள பார் ஈஸ்டர்ன் நினைவு மருத்துவமனையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.
40 வயதாகும் 700 தைவானியர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் புகை பிடிப்பவர்களும் கணிசமான அளவில் இடம் பெற்றிருந்தனர்.
இந்த ஆய்வுக்கு உட்பட்டவர்களில், புகை பிடிப்பவர்களுக்கு விரைவிலேய முடி கொட்டியதாகவும், சீக்கிரமே அவர்களுக்கு வழுக்கை ஏற்பட்டதாகவும் தெரிய வந்தது.
வழுக்கைத் தலை ஏற்படுவதற்கு குடும்பத்தில் யாருக்காவது அதுபோல இருக்கும் என்பது பொதுவான ஒரு அம்சம். ஆனால் புகை பிடிப்பவர்களுக்கு இது பொருந்தாது என்றும் தெரிய வந்துள்ளது.
ஒரு நாளைக்கு 20 சிகரெட் அல்லது அதற்கு மேலும் பிடிப்பவர்களுக்கு படு வேகமாக வழுக்கை விழுகிறதாம். இவர்களுக்கு முடி கொத்துக் கொத்தாக கொட்டுமாம்.
அதேசமயம், தீவிரமாக புகை பிடித்து விட்டு அதை நிறுத்தியவர்களுக்கும் கூட அந்தப் பாதிப்பு விலகுவதில்லையாம்.
தம் அடிப்பவர்களே, தலை பத்திரம்!












Click it and Unblock the Notifications