தமிழக - கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு
திருநெல்வேலி: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மிரட்டல் வந்துள்ளதால், தமிழக - கேரள எல்லையில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களை குண்டு வைத்து தகர்க்க தீவிரவாதிகள் இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்துள்ள நிலையில் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலை தாக்க தீவிரவாதிகள் சதி செய்துள்ளதாக அம்மாநில உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சபரிமலையில் கமாண்டோ படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். மாறுவேடத்திலும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்திலிருந்து கேரளாவுக்குள் வரும் வாகனங்களையும் தீவிர சோதனை நடத்திய பின்னரே அனுமதிக்கின்றனர். மேலும் தமிழக கேரள எல்லையான திருநெல்வேலி மாவட்டம் புளியரையில் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 5 போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இருப்பினும் தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் லாரிகளை மட்டுமே இந்த படையினர் சோதனை செய்கின்றனர். ஆனால் பேருந்துகள் உள்ளிட்ட பிற வாகனங்களையும் சோதனையிட வேண்டும். மேலும் ஐயப்ப பக்தர்கள் அதிகம் செல்லும் இந்த பாதையில் தீவிர ரோந்து பணியும், வாகன சோதனையும் நடத்தப்பட வேண்டும் என ஐயப்ப பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கேரள போலீஸார், வெடிகுண்டுகளைக் கண்டறியும் மெட்டல் டிடெக்டர் இல்லாமல் வாகன சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications