'காசு'க்குப் பஞ்சம் - மாற்றாக மிட்டாய்கள்!

மதுரையில் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் சில்லறைத் தட்டுப்பாடு நிலவுகிறது. குறிப்பாக 25 பைசா, 50 பைசா நாணயங்களைப் பார்ப்பது குதிரைக் கொம்பாகி விட்டது. இதனால் கண்டக்டர்கள், கடைக்காரர்கள்தான் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். பொது மக்களுக்கும் இதனால் இழப்பு ஏற்படுகிறது.
பேருந்துகள், ஹோட்டல்கள், மருந்துக் கடைகள், பலசரக்குக் கடைகள் உள்ளிட்ட இடங்களில் இந்த நாணயத் தட்டுப்பாட்டால் தினசரி பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
சில்லறைத் தட்டுப்பாடு காரணமாக மதுரையில் மிட்டாய்களின் விற்பனை திடீரென கிடுகிடுவென அதிகரித்துள்ளதாம். 50 பைசாவுக்குப் பதில் மிட்டாய்களையும், சாக்லெட்டுக்களையும் கொடுத்து சமாளிக்கிறார்கள். ஆனால் கடைக்காரர்களாவது மிட்டாய்களைக் கொடுத்து விடுகிறார்கள். பஸ் கண்டக்டர்கள்தான் 50 பைசா பாக்கியைக் கொடுப்பதே இல்ைல என்று மக்கள் புலம்புகிறார்கள்.
ஏன் இந்த திடீர் சில்லறைத் தட்டுப்பாடு என்று விசாரித்தால், மும்பையில் உள்ள பிளேடு தயாரிப்பாளர்கள் ஒட்டுமொத்தாக நாணயங்களை பதுக்குவது தான் காரணம் என்கிறார்கள். அதாவது தரமான பிளேடுகளைத் தயாரிக்க இந்த 50 பைசா நாணயங்கள்தான் உதவுகிறதாம். இதனால்தான் சில்லறைத் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறதாம்.
50 பைசா நாணயத்தை 1 ரூபாய் கொடுத்தும், ஒரு ரூபாய் நாணயத்தை 2 ரூபாய் கொடுத்தும் பிளேடு தயாரிப்பாளர்கள் வாங்கிச் செல்கிறார்களாம். இதனால் கடைக்காரர்களும் நாணயங்களை மொத்தமாக விற்று விடுவதாகக் கூறப்படுகிறது.
இந்த நாணயங்களை வாகன நிறுத்துமிடங்கள், கணிசமான பேருந்து கண்டக்டர்களிடமிருந்து பிளேடு தயாரிக்கும் நிறுவனங்களின் ஏஜென்டுகள் வாங்கி விடுகிறார்களாம்.
இந்த சில்லறை தட்டுப்பாட்டால் 50 பைசா நாணயங்களுக்குப் பதில் சாக்லெட்டுகள் தரப்படுகின்றன. குறிப்பாக ஹோட்டல்களில் காபி சாப்பிடச் சென்றால் (காபி ரூ. 3.50 என்று வைத்துக் கொண்டால்), நான்கு ரூபாயைக் கொடுத்தால் மீதம் 50 பைசாவுக்கு சாக்லெட் தரப்படுகிறது.
இதில் காமெடி என்னவென்றால் சில பஸ் கண்டக்டர்களும் இப்போது சில்லறைக்குப் பதில் சாக்லேட்டுக்களைக் கொடுக்க ஆரம்பித்துள்ளனராம்.
நல்ல வேளை, ஆளுக்கு ஒரு கரண்டி 'அல்வா' கொடுக்காமல் விட்டார்கள்!












Click it and Unblock the Notifications