பெரியாருக்கு 95 அடியில் சிலை: கருணாநிதி
சென்னை: சென்னையில், தந்தை பெரியாருக்கு 95 அடியில் பிரமாண்ட சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் 75வது பிறந்த நாளையொட்டி சென்னையில் விழா எடுக்கப்பட்டது. இதில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு வீரமணியை வாழ்த்திப் பேசினார்.
அப்போது முதல்வர் பேசுகையில், அண்ணா ஒருமுறை நாடாளுமன்றத்தில் பேசுகையில், என்னை ஒரு திராவிடன் என்று கூறிக் கொள்வதில், தமிழ்ச் சமுதாயத்தின் பிரதிநிதி என்று கூறிக் கொள்வதில் பெருமை அடைவதாக கூறினார்.
அண்ணாவின் வழியில், நானும், உலகெங்கும் வாழும் தமிழர்கள் துயர் துடைக்க, அவர்களின் நலன் காக்கும் பணியில் தொடர்ந்து தொய்வின்றி பாடுபடுவேன், உழைப்பேன். தமிழர்களுக்காக எத்தனை காலத்திற்கு உழைக்க வேண்டுமானாலும் அதற்கு நான் தயார்.
தந்தை பெரியாருக்கு 95 அடியில் சிலை வைக்க வேண்டும் என வீரமணி கோரிக்கை வைத்தார். அந்தக் கோரிக்கையை ஏற்கிறேன். சென்னையில் பெரியாருக்கு 95 அடியில் சிலை நிறுவப்படும். அந்த சிலை பெரியாரின் போதனைகளை பரப்பும் வகையில் அமையும்.
9 அடி, 10 அடியில் வைக்கப்படும் பெரியார் சிலைகள் மூலமாகவே அவரது கொள்கைகள் வேகமாக பரவி வரும் நிலையில், 95 அடியில் சிலை வைத்தால் இன்னும் வேகமாக பரவும். பெரியாரின் புகழைப் பாடும்.
இந்த சிலை வைப்பதால் ஏற்படும் எந்த விளைவையும் சந்திக்கத் தயார். என்ன ஆனாலும் பரவாயில்லை, இந்த சிலையை வைத்து சாதித்துக் காட்டுவேன்.
தமிழகத்தில் மொழிப் போர் தியாகிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதைப் போல, ஜாதி ஒழிப்புப் போராட்டத்தின் போது சிறை சென்ற, உயிரிழந்த குடும்பத்தினருக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும் என்றார் கருணாநிதி.
கப்பல் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு பேசுகையில், ராமர் பாலத்தைக் காக்கிறோம் என்ற போர்வையில் சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்ப்போர் நாட்டின் எதிரிகள் என்று வர்ணித்தார்.
நடிகர் சத்யராஜும் விழாவில் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், தமிழர்களுக்கு சற்றும் பொருத்தம் இல்லாதவர் ராமர். இங்கேயே உள்ளூர் தெய்வங்கள் நிறைய உள்ளன. அவர்கள் தமிழக மக்களைப் பாதுகாத்துக் கொள்வார்கள் என்றார்.