பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவர்கள்
நெல்லை: நெல்லையில் ஆசிரியர் விடுமுறை தராததால் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் பள்ளி மாணவர்கள் பிடிபட்டனர்.
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு மர்ம தொலைபேசி வந்துள்ளது. அதில் பேசியவர் இன்னும் ஒரு மணி நேரத்தில் உங்களது பள்ளியில் வெடிகுண்டு வெடிக்கும் என்று சொல்லிவிட்டு போனை கட் செய்துவிட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி ஊழியர் இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ்குமார் உடனே போலீசில் புகார் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த வெடிகுண்டு நிபுணர்களுடன் வந்த போலீசார் பள்ளியில் வெடிகுண்டு சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு எதுவும் இல்லை வெறும் புரளி என்பது தெரியவந்தது.
பள்ளிக்கு எங்கிருந்து போன் வந்தது என போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மேலப்பாளையம் செட்டிகுளம் அருகேயுள்ள ஒரு கடையின் காயின்பாக்ஸில் தொலைபேசியில் இருந்து போன் செய்துள்ள விவரம் தெரியவந்தது.
போலீசார் அங்குள்ளவர்களிடம் விசாரணை நடத்தியபோது இப்பகுதியை சேர்ந்த பள்ளி சிறுவர்கள் இருவர் தங்களது பள்ளி சீருடையில் வெகுநேரமாக அந்த காயின் பாக்ஸ் அருகில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த காயின் பாக்ஸ் போனில் 1 ரூபாய் நாணயத்தை போட்டு பேசியதாக தெரிவித்தனர்.
போலீசாரின் தீவிர விசாரணையில் கொட்டிகுளத்தை சேர்ந்த முத்துபாண்டியின் மகன் சுடலை, அதே பகுதியிலுள்ள அம்பிகாபுரத்தை சேர்ந்த பலவேசம் மகன் இசக்கிபாண்டி ஆகியோர் தான் வெடிகுண்டு மிரட்டலை விடுத்தது என தெரியவந்தது.
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளியில் சுடலை 6ம் வகுப்பும், அப்பகுதியில் இன்னொரு பகுதியில் உள்ள பள்ளியில் இசக்கி பாண்டி 5ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.
போலீசார் சிறுவர்களிடம் நடத்திய விசாரணையில், சுடலை தன்னுடைய வகுப்பாசிரியரிடம் 2 நாட்கள் விடுமுறை கேட்டதாகவும், அதற்கு அவர் மறுத்ததால் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கூறினான்.
இதனையடுத்து போலீசார் சிறுவர்களுக்கு அறிவுரை வழங்கி அவர்களது பெற்றோர்களை வரவழைத்து எழுதி வாங்கி கொண்டு எச்சரித்து அனுப்பினர்.