திருட்டு விசிடி வழக்கில் அழகிரி விடுதலை செல்லும்: உயர்நீதிமன்றம்
மதுரை: திருட்டு விசிடி வழக்கிலிருந்து மு.க.அழகிரி விடுதலை செய்யப்பட்டது செல்லும் என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை தீர்ப்பளித்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியின்போது, 2003ம் ஆண்டு, தா.கிருட்டிணன் கொலை வழக்கில் மு.க.அழகிரி கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள அழகிரிக்குச் சொந்தமான வீடியோ கடையில் போலீஸார் சோதனை நடத்தினர்.
இதையடுத்து கடையில் ஆயிரக்கணக்கான திருட்டு விசிடிக்கள் இருந்ததாக கூறி அழகிரி உள்ளிட்ட இருவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை மதுரை 5வது நீதித்துறை நடுவர் நீதிமன்றம் விசாரித்து வந்தது. அப்போது தன்னை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி அழகிரி மனு தாக்கல் செய்தார். ஆனால் அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பின்னர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் அழகிரி அப்பீல் செய்தார். அந்த மனுவை ஏற்ற செஷன்ஸ் நீதிமன்றம், அழகிரியை வழக்கிலிருந்து விடுவித்து தீர்ப்பளித்தது.
கடந்த ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி விடுவிக்கப்பட்டார் அழகிரி. இதை எதிர்த்து காவல்துறை திருட்டு வீடியோ தடுப்புப் பிரிவு ஆய்வாளர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கடையின் உரிமையாளராக அழகிரி இருந்தபோதிலும், கடையின் நிர்வாகத்தை மேனேஜர் தாமோதரனிடம்தான் வழங்கியுள்ளார். மேலும், சம்பவம் நடந்ததாக கூறப்படும் தேதியில் வேறொரு வழக்கில் கைதாகி சிறையில் இருந்துள்ளார்.
எனவே இந்த வழக்கில் அழகிரிக்கு தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. எனவே வழக்கிலிருந்து விடுவித்து செஷன்ஸ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது என்று தீர்ப்பளித்தது.












Click it and Unblock the Notifications