தமிழகத்தில் மின்வெட்டு வழக்கமாகிவிட்டது-சரத்குமார்
சென்னை: தமிழகம் முழுவதும் மின்வெட்டு அடிக்கடி நடப்பது அன்றாட நடைமுறையாகி விட்டதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
அடிக்கடி மின்வெட்டு அன்றாட நடைமுறையாகிவிட்டது. மக்கள் ஏதும் செய்யமுடியாத நிலையில் உள்ளனர். மக்கள் நலனை காக்க வேண்டிய கட்சிகள் மவுனம் காத்து வருகின்றன.
ஆட்சி செய்த, ஆட்சி செய்கின்ற அதிமுக, திமுக இந்த மின்வெட்டுக்கு இதுவரை விளக்கமா, தீர்வோ சொல்லவில்லை. ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டிக் கொள்கிறார்கள்.
மின்சாரம் விஷயத்தில் 15 ஆண்டுகளாகவே இரு கட்சிகளின் ஆட்சிகளும் கவனம் செலுத்தவில்லை என்பதே உண்மை. எனவே இந்த பிரச்சனைக்கு உடனே தீர்வு காண்பதும் எளிதல்ல.
எந்த மின் உற்பத்தில திட்டமும் தொடங்கிய 5 ஆண்டுக்கு பிறகே பயன்தரும். அதை கவனத்தில் கொள்ளாமல் திட்டங்கள் தீட்டப்பட்டன. 1992ம் ஆண்டு மின் உற்பத்தித் துறையில், தனியார் நுழைய மத்திய அரசு அனுமதியளித்தது. 1995-96ம் ஆண்டுகளில் 16 தனியார் நிறுவனங்களுடன் அதிமுக அரசு 16 உடன்பாடுகள் கையெழுத்திட்டது.
திமுக ஆட்சி வந்ததும் இந்த உடன்பாடுகள் அனைத்தும் கைவிடப்பட்டன. மின்சக்தியில் தமிழகம் தன்னிறைவு பெற்றுவிட்டது என்கிற தவறான அறிவிப்பையும் திமுக ஆட்சி வெளியிட்டது. விநோதம் என்னவென்றால் 2001ம் ஆண்டு அதிமுக ஆட்சி கையெழுத்திட்ட ஒப்பந்தங்களை பிறகு அவர்களே கைகழுவினார்கள் என்பதுதான்.
மேலும் மேலும் புதிய தொழில்கள் வருவது பற்றி திமுக கொண்டிருந்ததே தவிர அந்த தொழில்களுக்கு மின்சாரம் தேவைப் பற்றி கவலைப்படவில்லை.
மத்திய எரிசக்தி அமைச்சராக ரங்கராஜன் குமாரமங்கலம் இருந்தபோது, தேசிய அனல் மின்சார கார்ப்பரேஷன் மூலம் 2,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய செய்யாறில் ஒரு நிலையம் அமைக்கப்பட்டது. அந்த திட்டமும் பின்னர் கைவிடப்பட்டது.
ஆக இன்றைய மின்சக்தி நெருக்கடியை எப்படி சமாளிப்பது, எதிர்காலத்துக்கு என்ன செய்வது என்பது பற்றிய எந்த தெளிவான கொள்கையும் இன்றைய ஆட்சியிடம் இல்லை.
மின் நிலையங்களின் முழு உற்பத்தித் திறன் எட்டப்படவில்லை. தேவைப்படும் இயந்திரங்கள் மற்றும் உதிரி பாகங்களை வாங்குவதற்காக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு இன்னும் முடிவு எடுக்கப்படாமல் அந்தரத்தில் நிற்கன்றன என்று தெரிகிறது.
இதற்கெல்லாம் காரணம் என்ன என்று மின்வெட்டால் பாதிக்கப்படும் மக்கள் கேட்கிறார்கள். அரசு அதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று சரத்குமார் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications