சென்னை விமான நிலையத்தில் விடுதலைப்புலிகள் கைது
சென்னை: சென்னை விமான நிலையத்தில் விடுதலைப்புலிகள் 2 பேரை கியூ பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் விடுதலைப் புலிள் ஊடுறுவியிருப்பதாகவும், படகுகள் வாங்க அவர்கள் வந்துள்ளதாகவும், விமான நிலையத்தில் வைத்து அவர்கள் சந்திக்கவுள்ளதாகவும் கியூ பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலையத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், நேற்று மாலை சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய 2 பேரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் இருவரும் விடுதலைப்புலிகள் என்று தெரியவந்தது.
அவர்களில் ஒருவரான ஜேம்ஸ் என்கிற ராஜா (46) மன்னார் டவுன் பகுதியைச் சேர்ந்தவர். இன்னொருவரான கவுரிசங்கர் என்கிற ஜெயக்குமார் (34) என்பதும் தெரிய வந்தது.
கவுரிசங்கர் கடல்புலி பிரிவை சேர்ந்தவராம். இவர் விடுதலைப் புலிகளுக்கு தேவையான அதி நவீன படகுகளை வாங்குவதற்காக கடந்த பிப்ரவரி மாதம் கள்ளப் படகு மூலம் வந்துள்ளார். இவருக்கு மலேசியாவை சேர்ந்த விடுதலைப்புலி கருப்பையா என்பவர் படகு வாங்குவதற்காக
ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் பணம் அனுப்பியுள்ளார்.
திருச்சியில் உள்ள உறவினர்கள் வீட்டில் தங்கியிருந்து படகு வாங்குவதற்கான் அனைத்து வேலைகளையும் செய்து வந்துளார் கவரிசங்கர். இவருக்கு உதவுவதற்காக ஜேம்ஸ் விமானம் மூலம் சென்னை வந்தார்.
மலேசியாவில் இருந்து அனுப்பப்பட்ட பணத்தில் அடிக்கடி விடுதலைப்புலிகளுக்கு தேவையான பொருட்களை கள்ளத் தோணி மூலம் கடத்துவதை ஜேம்ஸ் வழக்கமாக வைத்துள்ளார்.
கருப்பையா கொடுத்த பணத்தை வைத்து சென்னை, சூளைமேட்டை சேர்ந்த தொழிலதிபர் ரவிக்குமார் என்பவரின் உதவியுடன் படகை வாங்கியுள்ளார். இதை இலங்கைக்கு கடத்துவதற்காக தான் ஜேம்ஸ் இந்தியா வந்துள்ளார்.
இவர்கள் தங்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் ரவிக்குமார் செய்து கொடுத்துள்ளார். இதன் பேரில் கியூ பிரிவு போலீசார் ரவிக்குமாரையும் கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட ஜேம்ஸ் மற்றும் கவுரிசங்கரிடமிருந்து 4 செல்போன்கள், ரொக்க பணம் ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் மற்றும் இலங்கை பணம் ரூ.4,140 ஆகியவற்றையும் கைப்பற்றினர்.
இலங்கைக்கு கடத்தவிருந்த படகை தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் என்ற இடத்தில் மறைத்து வைத்திருந்ததையும் போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
இவர்கள் திருச்சியில் எங்கு தங்கியிருந்தார்கள், திருச்சி நகருக்குள் வேறு விடுதலைப்புலிகள் எவரும் ஊடுருவியுள்ளனரா என்றும், மலேசியாவிலிருந்து பணம் அனுப்பிய விடுதலைப்புலி கருப்பையா பற்றியும் கியூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தலைநகரிலேயே 2 விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.