ராமர் பாலத்தை இடிக்கவிட மாட்டோம்-இல.கணேசன்
சென்னை: விஞ்ஞானப் பூர்வமான கருத்துக்களை மக்களிடம் எடுத்துச் சொல்லி ராமர் பாலத்தை இடிக்க விடாமல் தடுப்போம் என்று பாரதிய ஜனதாவின் மாநில தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலில் உள்ளது. மழுப்பலான காரணங்களை அரசு தேடுவதை விட்டு விட்டு தடையின்றி மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
பெரும்பாலான மக்கள் விவசாயத்தை சார்ந்துள்ள நம் நாட்டில் வெளிநாட்டு நிறுவனங்கள் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டால், அது நாட்டின் அடிப்படை கட்டமைப்பையே சீர்குலைத்து விடும். இத்திட்டத்தை வாபஸ் பெறவேண்டும்.
விவசாய நிலங்களை அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்வதால், நாட்டின் விவசாயப் பொருளாதாரம் குலைந்துவிடும். சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற ராமர் பாலம் பிரசாரத்தை முறியடிக்க வேண்டும் என்று நெல்லை திமுக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதை சவாலாக ஏற்றுக்கொண்டு நாங்களும் பிரசாரம் செய்வோம்.
ராமர் பாலத்தை இடிக்காமல் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். அதை இடித்தே தீருவோம் என்று கூறி வருகிறார்கள். வரலாற்று சிறப்புமிக்க ராமர் பாலம் இருக்கும் பகுதியில், விலை மதிப்புமிக்க தோரியம் தாது உள்ளது. அது அணு உலைக்கு தேவைப்படும் முக்கிய எரிபொருள். பாலத்தை உடைத்தால் அது கடலில் கரைந்து வீணாகிவிடும்.
விஞ்ஞானப் பூர்வமான கருத்துக்களை மக்களிடம் எடுத்துச் சொல்லி ராமர் பாலத்தை இடிக்க விடாமல் தடுப்போம். ராமர் பாலத்தை பாதுகாக்க வலியுறுத்தி, வரும் 30ம் தேதி டெல்லியில் பேரணி நடக்கிறது என்றார் இல.கணேசன்.