ஈரோடு மாநகராட்சி -29ம் தேதி தொடங்கி வைக்கிறார் கருணாநிதி

ஈரோடு: புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஈரோடு மாநகராட்சியை முதல்வர் கருணாநிதி 29ம் தேதியன்று தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தின் புதிய மாநகராட்சிகளாக ஈரோடு மற்றும் திருப்பூர் நகராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இவற்றையும் சேர்த்து தமிழக மாநகராட்சிகளின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
ஈரோடு நகராட்சியை மாநாகராட்சி ஆக்க வேண்டும் என்பது பெரியாரால் எழுப்பப்பட்ட கருத்தாகும். நீண்ட காலமாக இருந்து வந்த இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன.
இந் நிலையில் ஈரோடு நகராட்சியை மாநகராட்சியாக மாற்றம் பெறுவதற்கான முயற்சிகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டார். அதன் பயனாக ஈரோடு நகராட்சியை முதல்வர் கருணாநிதி மாநகராட்சியாக அறிவித்தார்.
அதன்படி நகராட்சிகளான வீரப்பன் சத்திரம், சூரம்பட்டி, பெரியசேமூர், காசிபாளையம் ஆகியவையும், பேரூராட்சிகளான பி.வி. அக்ரஹாரம், சூரியம்பாளையம் ஆகியவையும், ஊராட்சிகளான முத்தம்பாளையம், திண்டல், மாணிக்கம் பாளையம், எல்லப்பாயைம் ஆகியவற்றை இணைத்து ஈரோடு மாநகராட்சி உருவாக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.
இதேபோல திருப்பூர் நகராட்சியும், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. நகராட்சித் தலைவர்கள் மேயர்களாகவும், துணைத் தலைவர்கள் துணை மேயர்களாகவும் செயல்படும் வகையில் அவசரச் சட்டமும் பிறப்பிக்கப்பட்டது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
இதைத் தொடர்ந்து ஈரோடு மாநகராட்சி துவக்க விழாவுக்கு தேதி குறிக்கப்பட்டு விட்டது. வருகிற 29ம் தேதி ஈரோட்டில் உள்ள சி.எஸ்.ஐ. மைதானத்தில் ஈரோடு மாநகராட்சி தொடக்க விழா நடைபெறுகிறது.
முதல்வர் கருணாநிதி ஈரோடு மாகநராட்சியை தொடங்கி வைக்கிறார். இதே விழாவில், ஈரோடு நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பிரப் ரோடு அருகில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கான கட்டுமான பணிகளையும் முதல்வர் தொடங்கி வைக்கிறார்.












Click it and Unblock the Notifications