முதுநிலை பட்டதாரிகளுக்காக மதுரையில் புதிய வேலை வாய்ப்பு அலுவலகம்
சென்னை: தற்போது சென்னையில் உள்ளதைப் போன்ற முதுநிலை பட்டப் படிப்புகளைப் பதிவு செய்யும் வேலை வாய்ப்பு அலுவலகத்தைப் போல, தென் மாவட்ட மக்களின் வசதிக்காக மதுரையில் விரைவில் ஒன்று தொடங்கப்டும் என தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் முதுநிலை பட்டப் படிப்புகளை முடிக்கும் மாணவ, மாணவியர் அவற்றைப் பதிவு செய்ய வேண்டுமானால் சென்னைக்குத்தான் வர வேண்டிய நிலை உள்ளது. சென்னையில் மட்டுமே முதுநிலை பட்டப்படிப்புகளைப் பதிவு செய்யும் வேலை வாய்ப்பகம் உள்ளது.
இதனால் தமிழகத்தின் தென் மாவட்ட மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் சென்னையில் உள்ள முதுநிலை பட்டப் படிப்புக்கான வேலை வாய்ப்பு அலுவலகத்திலும் கூட்டம் அலை மோதுவதால் ஒரே நாளில் பதிவு செய்து திரும்ப முடியாத நிலை ஏற்படுகிறது.
இதைத் தவிர்க்க தென் மாவட்ட மாணவ, மாணவியரின் வசதிக்காக மதுரையில் முதுநிலை பட்டப்படிப்புக்கான வேலை வாய்ப்பு அலுவலகம் தொடங்கப்படும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தமிழகத்தில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்களில் கிட்டத்தட்ட 48 லட்சம் பேர் பதிவு செய்து வைத்து வேலைக்காக காத்துள்ளனர். இந்த ஆண்டு மட்டும் 10 லட்சம் பேர் புதிதாக பதிவு செய்துள்ளனர்.
கடந்த 2001ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை ஆள் குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதால் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் எந்தப் பணியும் நடைபெறவில்லை. புதுப்பிப்புப் பணிகள் பெரும் பாதிப்பை சந்தித்தன.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த காலத்தில் புதுப்பிக்கத் தவறியவர்களின் நலனுக்காக சிறப்புச் சலுகை அளிக்கப்பட்டது. இதன் பலனாக 2 லட்சத்து 40 ஆயிரம் பேர் பலன் அடைந்தனர்.
தற்போது சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பெரும் கூட்டம் சேருவதால் இட நெருக்கடி ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க கிண்டியில் புதிய கட்டடம் கட்டப்படும்.
மேலும், தென் மாவட்ட மாணவ, மாணவியரின் வசதிக்காக மதுரையில் புதிதாக ஒரு வேலை வாய்ப்பு அலுவலகம் தொடங்கப்படும். இதனால் முதுநிலைப் பட்டதாரிகள் சென்னைக்கு பதிவு செய்வதற்காக வருவதைத் தவிர்க்க முடியும் என்றார் அன்பரசன்.












Click it and Unblock the Notifications