சென்னையில் 5 மதுரை ரவுடிகள் கைது
சென்னை: மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி 'டாக்' ரவியைக் கொலை செய்வதற்காக பயங்கர ஆயுதங்களுடன் சென்னைக்கு வந்த மதுரையைச் சேர்ந்த 5 ரவுடிகளை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை மகாகவி பாரதி நகர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வேகமாக வந்த ஒரு டாடா சுமோ காரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அதில் இருந்த ஒரு நபர் கத்தியைக் காட்டி மிரட்டினார். இதையடுத்து போலீஸார் மின்னல் வேகத்தில் அந்த காரை துப்பாக்கி முனையில் சூழ்ந்தனர்.
காரில் இருந்தவர்களை கீழே இறக்கினர். காருக்குள் சோதனை செய்து பார்த்தபோது, 4 நாட்டு வெடிகுண்டுகள், ரூ.1 லட்சம் ரொக்கப்பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து காரில் இருந்த அழகன்(37), அவனது சகோதரர்கள் விஜயகுமார் (28), செந்தில்குமார் (25) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். 3 பேரும் ரவுடிகள். மதுரையைச் சேர்ந்தவர்கள்.
தங்களது கூட்டாளிகள் இருவர் அரும்பாக்கம் வள்ளுவர் சாலையில் ஒரு அப்பார்ட்மென்ட் வீட்டில் பதுங்கி இருப்பதாக இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அங்கு விரைந்த போலீஸார், அங்கிருந்த மற்றொரு செந்தில்குமார் (28), கணேசன் (28) ஆகிய மேலும் 2 ரவுடிகளையும் கைது செய்தனர்.
அந்த வீட்டில் அவர்கள் பதுக்கி வைத்திருந்த 4 நாட்டு வெடி குண்டுகள், 12 பட்டாக்கத்தி மற்றும் வீச்சரிவாள்கள், ஒரு கோடாரி, ரூ.21 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி டாக் ரவி என்பவர் சென்னைக்கு வந்திருப்பதாகவும், அவரைத் தீர்த்துக் கட்டும் நோக்கத்தில் பின் தொடர்ந்து வந்ததாகவும் தெரிவித்தனர்.
பிடிபட்ட கும்பலின் தலைவராக அழகன் செயல்பட்டுள்ளார். இவர் மீது மதுரையில் 4 கொலை வழக்குகள், 2 வெடிகுண்டு வழக்குகள் மற்றும் ஆள் கடத்தல், கொள்ளை வழக்குகள் இருக்கின்றனவாம்.
ஒரு கொலை வழக்கில் அழகன் ஆயுள்தண்டனை பெற்று தற்போது ஜாமீனில் வெளியே இருப்பதும், 4 பிடிவாரண்டுகள் நிலுவையில் இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அரும்பாக்கம் வீட்டில் கைது செய்யப்பட்ட செந்தில்குமார் தொலைக் காட்சித் தொடர்களில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறாராம். சினிமாவிலும், தொலைக்காட்சித் தொடரிலும் நடிக்க வந்திருப்பதாகக் கூறி இவர்கள் அரும்பாக்கத்தில் தங்கியிருந்தனராம்.
இவர்கள் மீது பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாஞ்சில் குமரன் பாராட்டு:
மதுரையைச் சேர்ந்த ரவுடிக் கும்பலை வளைத்துப் பிடித்து பெரும் அசம்பாவிதத்தைத் தவிர்த்த போலீஸ் படையினரை மாநகர காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரன் பாராட்டி ரொக்கப் பரிசையும் வழங்கினார்.












Click it and Unblock the Notifications