கென்யாவில் சிக்கித் தவிக்கும் இளவரசர் ஹாரியின் காதலி
லண்டன்: இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் காதலி செல்சி டேவி, கென்யாவுக்கு சுற்றுலா போன இடத்தில், அங்கு தற்போது நடந்து வரும் கலவரத்தில் சிக்கி நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்.
இளவரசர் ஹாரியின் காதலி செல்சி டெவி. ஜிம்பாப்வேயில் பிறந்து இங்கிலாந்தில் வசித்து வருகிறார். கடந்த மாதம் அவர் விடுமுறைக்காக கென்யா சென்றார்.
கென்யாவின் சுற்றுலா நகரமான மலிந்தி என்ற இடத்தில் உள்ள சொகுசு விடுதியில் தங்கி தனது விடுமுறையை அனுபவித்து வந்தார். அவருடன் சகோதரர் ஷான் மற்றும் சில நண்பர்களும் உடன் உள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமைக்குகள் அவர் நாடு திரும்புவதாக இருந்தது. காரணம் இன்று முதல் அவர் படித்து வரும் லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் தேர்வுகள் தொடங்குகின்றன.
ஆனால் கென்யாவில் வெடித்த பெரும் கலவரம் காரணமாக செல்சியால் நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தங்கியிருக்கும் விடுதியிலிருந்து விமான நிலையம் வரை கூட வர முடியாத அளவுக்கு வன்முறை தலைவிரித்தாடுகிறது. மேலும் அங்கிருந்து தலைநகர் நைரோபி வந்து பின்னர்தான் லண்டனுக்கு விமானத்தைப் பிடிக்க வேண்டும். இடையில் என்ன நடக்கும் என்று கூற முடியாத நிலை.
இதனால் அவர் விடுதியிலேயே தொடர்ந்து தங்கியுள்ளாராம். நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறாராம்.
ஹாரியும், செல்சியும் தீவிரமாக காதலித்து வருகின்றனர். இருப்பினும் கடந்த ஆண்டு திடீரென ஹாரியை விட்டுப் பிரிவதாக அறிவித்தார் செல்சி. சொன்னபடி நடந்து கொள்வதில்லை ஹாரி என்று அப்போது குற்றம் சாட்டியிருந்தார். இருப்பினும் பின்னர் இருவரும் இணைந்து விட்டனர்.