பெட்ரோலிய நிறுவனத்தில் ஆயில் சிலிண்டர் வெடித்து 2 பேர் பலி
சென்னை: சென்னை அருகே மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் (சி.பி.சி.எல்) ஆயில் சிலிண்டர்களை மாற்றும் பணியின்போது ஆயில் சிலிண்டர் வெடித்த விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்திலிருந்து சில மாதங்களுக்கு முன்பு ஹைட்ரோகார்பன் வாயு கசிவு ஏற்பட்டதால் வட சென்னை மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
இந்த நிலையில் சிபிசிஎல் ஆலையில் எண்ணை சிலிண்டர்கள் (டேங்க் மிதவைகள்) சுத்தப்படுத்தும் பணி நடந்தது. அப்போது வெல்டிங் செய்யும் வேலையில் ஆந்திராவைச் சேர்ந்த சில தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஒரு சிலிண்டர் திடீரென பயங்கர சப்தத்துடன் வெடித்தது. இதில் லோகேஸ்வரராவ், சுரேஷ் ஆகியோர் தீயில் கருகி பலியானார்கள்.
ஜோகர் ராவ், சந்திரய்யா ஆகியோர் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் இருவரும் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.