போடி நாயக்கனூரில் பறவைக் காய்ச்சல் பரவவில்லை - அரசு விளக்கம்
சென்னை: தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் பறவைக் காய்ச்சல் வரவில்லை. சரியான தீவனம் கொடுக்காததால்தான் அங்கு பெருமளவில் கோழிகள் இறந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் பறவைக் காய்ச்சல் பரவி வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் போடி அருகே சில்லோடை என்ற இடத்தில் ஆயிரக்கணக்கான கோழிகள் இறந்த நிலையில் கிடந்தன. குவியல் குவியலாக கிடந்த கோழிகளால் அப்பகுதியில் பறவைக் காய்ச்சல் பீதி ஏற்பட்டது.
கிட்டத்தட்ட ஆயிரம் கோழிகள் வரை மூன்று இடத்தில் போட்டு விட்டுச் சென்றுள்ளனர். தகவல் அறிந்ததும் விரைந்து வந்த அதிகாரிகள் அவற்றைக் கைப்பற்றினர். சில கோழிகளின் இறந்த உடல்களை சோதனைக்காக எடுத்துக் கொண்டனர். மற்ற கோழிகளின் உடல்களை குவியலாக போட்டு தீவைத்து எரித்து விட்டனர்.
இந்த நிலையில் இந்தக் கோழிகள் பறவைக் காய்ச்சலால் இறக்கவில்லை என்று அரசு விளக்கியுள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மற்றும் தேவதானப்பட்டி ஆகிய பகுதிகளில் பறவைக் காய்ச்சல் தாக்கியுள்ளதாக கூறப்படுவதில் உண்மை இல்லை.
அங்கு பெருமளவில் கோழிகள் இறந்து கிடந்ததாக வந்த தகவவைத் தொடர்ந்து அங்கு சென்ற அதிகாரிகள் சில மாதிரிகளை எடுத்து வந்தனர். அவற்றில் நடத்தப்பட்ட சோதனையில், கோழிகளுக்குப் பறவைக் காய்ச்சல் வைரஸ் தாக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது.
சரியான தீவனம் கிடைக்காததால், அவை பட்டினியில் இறந்துள்ளது தெரிய வந்துள்ளது.
இதுபோல தீவனம் சரியாக கொடுக்காத கோழிப்பண்ணையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இதுபோல கோழிகள் பெருமளவில் இறந்தால் உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தர வேண்டும். அவர்களாகவே கோழிகளை தூக்கி வீசி விட்டு போகக் கூடாது.
தவறு செய்த கோழிப்பண்ணையாளர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை எந்த இடத்திலும் பறவைக் காய்ச்சல் தாக்கவில்லை. எனவே பொதுமக்கள் எந்தவித பயமும், பீதியும் இன்றி வழக்கம் போல கோழி இறைச்சியையும், முட்டையையும் சாப்பிடலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே, தமிழக கால்நடைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், நேற்று உயர் அதிகாரிகளுடன் பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து
ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில், கால்நடைத்துறைச் செயலாளர் லீனா நாயர், கால்நடை பாதுகாப்பு ஆணையர் பி.ஆர்.சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.