பெனாசிர் கொலை: மனித வெடிகுண்டு நபரின் அடையாளம் கண்டுபிடிப்பு
இஸ்லாமாபாத்: பெனாசிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்ட பின்னர் மனித வெடிகுண்டாக மாறி வெடித்துச் சிதறிய நபரின் அடையாளத்தை பாகிஸ்தான் போலீஸார் கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராவல்பிண்டியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் பெனாசிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகம் உள்ள தெற்கு வசிரிஸ்தான் பழங்குடி பகுதியிலிருந்து ஐதாஸ் ஷா என்ற 15 வயது சிறுவன் ஜனவரி 19ம் தேதி கைது செய்யப்பட்டான்.
தானும் மேலும் இருவரும்தான் பெனாசிரைக் கொல்ல வந்த படையில் இடம் பெற்றிருந்ததாக ஷா பரபரப்பு வாக்குமூலம் அளித்தான். இதையடுத்து விசாரணை முடுக்கி விடப்பட்டது.
இந்த நிலையில், பெனாசிர் படுகொலைச் சம்பவத்தின்போது மனித வெடிகுண்டாக மாறி வெடித்தது பிலால் என்பது தெரிய வந்துள்ளது. இவரை ஷா அடையாளம் காட்டியுள்ளான்.
இந்த வழக்கு தொடர்பாக ஷா கைது செய்யப்பட்ட அதே பகுதியிலிருந்து ஷெர் ஸமான் என்ற இன்னொரு நபரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.