திருமண வீட்டில் பட்டு சேலை திருடிய பெண் கைது
பாவூர்சத்திரம்: பாவூர்சத்திரம் அருகே திருமண வீட்டில் உறவினர் போல் நுழைந்து பட்டு சேலைகளை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம், பாவூர்சத்திரம் அருகேயுள்ள நாவல்சத்திரத்தை சேர்ந்தவர் அருமை நாயகத்தின் தம்பிக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு வந்திருந்தவர்களில் சந்தேகப்படும் படியாக ஒரு பெண் நின்றுக் கொண்டிருந்தார்.
அவர் வைத்திருந்த பையை திருமண வீட்டார் வாங்கி சோதனையிட்டபோது அதில் 4 பட்டு சேலைகள் இருந்தன. தொடர்ந்து அவரை விசாரித்ததில், அவர் சத்திரம் பாரதி பள்ளி தெருவை சேர்ந்த பழனிகுமார் மனைவி மாரியம்மாள் என்பது தெரிய வந்தது. திருமண வீட்டில் விருந்தினர் போல் நடித்து பட்டு சேலைகளை திருடியதை ஒப்புக் கொண்டார்.
திருமண வீட்டார் போலீசில் புகார் செய்ததை அடுத்து, மாரியம்மாளை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து ரூ.5,000 மதிப்புள்ள பட்டு சேலைகள் 4 பறிமுதல் செய்தனர்.