கொல்கத்தாவில் ராஜ் தாக்கரே கொடும்பாவி எரிப்பு
கொல்கத்தா: வட இந்தியர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய மகாராஷ்டிர நவநிர்மான் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரேவைக் கண்டித்து கொல்கத்தாவில் அவரது கொடும்பாவியை எரித்துப் போராட்டம் நடத்தப்பட்டது.
மேற்கு வங்க மாநில சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் விஜய் உபாத்யாய் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். எஸ்பிளனேடு பகுதியில் ராஜ் தாக்கரேவின் கொடும்பாவி தீவைத்துக் கொளுத்தப்பட்டது.
பின்னர் பால் உபாத்யாய் பேசுகையில், பிரிவினைப் போக்குடன் ராஜ் தாக்கரே பேசியுள்ளார். உடனடியாக அவரை கைது செய்ய வேண்டும்.
அமிதாப் பச்சன் குறித்தும், வட இந்தியர்கள் குறித்தும் இழிவாக அவர் பேசியுள்ளர். அதுதவிர வட இந்தியாவில் இந்துக்கள் மிகுந்த மத உணர்வுடன் கொண்டாடும் சாத் பூஜாவையும் இழிவுபடுத்தி அவர் பேசியுள்ளார்.
பல்வேறு கலாச்சாரம், இனங்கள், சமூகத்தினர் இணைந்து வாழும் இந்தியாவில் இதுபோல பேசுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாது என்றார் அவர்.