கிருஷ்ணசாமி திடீர் டெல்லி பயணம்
சென்னை: விடுதலைப் புலிகள் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கும், திமுகவுக்கும் இடையே பனிப்போர் வலுத்து வரும் நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி திடீர் என டெல்லி விரைந்துள்ளார்.
விடுதலைப் புலிகள் ஊடுறுவல் தொடர்பாகவும், தொல். திருமாவளவன் தொடர்ந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்துப் பேசி வருவதையும் காங்கிரஸ் கட்சி கண்டித்து கருத்து தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக காங்கிரஸ் மற்றும் திமுக தலைவர்களுக்கிடையே கடும் பனிப்போரும், அறிக்கைப் போரும் நடந்து வருகிறது.
சமீபத்தில் சட்டசபையிலும் இது வெடித்தது. முதல் முறையாக காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்து திமுகவை அதிர்ச்சியில் ஆழ்த்தினர்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையன்று சென்னையில் நடந்த திருமண விழாவில் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி முன்னிலையிலேயே தனது ஆதங்கத்தை முதல்வர் கருணாநிதி வெளிப்படுத்தினார். ஆட்சி மாற்றத்துக்கு சதி நடப்பதாக முதல்வர் குற்றம் சாட்டினார். ஆட்சியை இழக்கவும் தாங்கள் தயாராக இருப்பதாக அவர் ஆவேசமாக கூறினார்.
ஆனால் முதல்வரையோ, திமுக ஆட்சியையோ காங்கிரஸ் தலைவர்கள் யாரும் விமர்சிக்கவில்லை என்று கிருஷ்ணசாமி மறுப்பு தெரிவித்து அடுத்த நாள் பேட்டி அளித்தார்.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர்களின் பேச்சும், போக்கும் திமுகவுக்கு கடும் அதிருப்தியை அளித்துள்ளது. இதுகுறித்து கட்சி மேலிடத்தில் திமுக தரப்பு கொண்டு போயுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் பின்னணியில், கிருஷ்ணசாமி இன்று காலை திடீரென டெல்லி விரைந்தார். மேலிட அழைப்பின் பேரிலேயே அவர் டெல்லி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
மேலிடத்தை சந்தித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் நிலை குறித்து கிருஷ்ணசாமி விளக்குவார் என்று தெரிகிறது.