தமிழக போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு
சென்னை: தமிழக போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு புதிய ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு புதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை சென்னை தரமணியில் உள்ள சாலை போக்குவரத்து நிறுவனத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் பற்றி அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது,
புதிய ஒப்பந்தத்தின்படி அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு மாதம் 1,000 ரூபாயில் இருந்து ரூ.2,124 வரை சம்பள உயர்வு கிடைக்கும். அடிப்படை ஊதியத்தில் 12 சதவீதம் உயர்த்தப்படுகிறது. இதனால் 1 லட்சத்து 20 ஆயிரம் தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள்.
அரசுக்கு ஆண்டுக்கு ரூ.195 கோடி கூடுதல் செலவாகும்.
இதர படிகள் உயர்த்தப்பட்டுள்ள வகையில் அரசுக்கு கூடுதலாக ரூ.11 கோடி செலவு அதிகரிக்கும். இந்த ஒப்பந்த பேச்சுவார்த்தை இனி 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் என்றார்.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தின்போது போக்குவரத்துக் கழக அதிகாரிகளும், தொழிற்சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
கருணாநிதிக்கு நன்றி:
இந் நிலையில் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் செ.குப்புசாமி, பொதுச் செயலாளர் சண்முகம், பொருளாளர் ரத்தின சபாபதி ஆகியோர் முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து ஊதிய உயர்வுக்கு நன்றி தெரிவித்தனர். அமைச்சர் நேருவுக்கும் நன்றி கூறினர்.
பின்னர் குப்புசாமி நிருபர்களிடம் பேசுகையில்,
அதிமுக ஆட்சி காலத்தில் பறிக்கப்பட்ட சலுகைகளை திரும்ப வழங்குவோம் என தேர்தல் அறிக்கையிலேயே கருணாநிதி கூறியிருந்தார். அதற்கு இப்போது செயல் வடிவம் தந்து ஊதிய உயர்வு, போனஸ், பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி தொழிலாளர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் என்றார்.