வீரமணி அட்வைஸ் தேவையில்லை-ராமதாஸ்
திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களிடம் இன்று டாக்டர் ராமதாஸ் பேசினார். அப்போது தி.க. தலைவர் கி.வீரமணியை கடுமையாக சாடினார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற, தற்போது உள்ள பாதைக்கு எதிர்ப்பு ஏற்பட்டால், மாற்றுப் பாதை குறித்து சிந்திக்கலாம். எப்படியாவது திட்டம் நிறைவேறினால் போதும் என்று நான் கூறவில்லை. முதல்வர் கருணாநிதிதான் ஆரம்பத்தில் தெரிவித்தார்.
அவரது கருத்தைப் பிரதிபலிக்கும் விதமாகத்தான், மாற்றுப் பாதை குறித்து யோசிக்கலாம். நமக்கு மாற்றுப் பாதை குறித்துப் பிரச்சினை இல்லை. திட்டம்தான் முக்கியம் என்று தெரிவித்திருந்தேன். இந்தக் கருத்தில் மாற்றம் இல்லை. இப்போதும் இதையே வலியுறுத்துகிறேன்.
இதுகுறித்து தோழமைக் கட்சிகளுடன் பேசி முடிவெடுக்கலாம் என்றும் நான் தெரிவித்திருந்தேன்.
இதில் தி.க தலைவர் கி.வீரமணி தலையிட எந்த அவசியமும் இல்லை. இது முதல்வருக்கும், எனக்கும் சம்பந்தப்பட்ட பிரச்சினை. வீரமணி, பெரியாரின் கொள்கையைப் பரப்பும் வேலையை மட்டும் பார்த்தால் போதும். அவருடைய அரசியல் ஆலோசனை எனக்குத் தேவையில்லை என்று காட்டமாக கூறினார் டாக்டர் ராமதாஸ்.