அதிமுக எம்எல்ஏ பதவி-ராஜினாமா செய்ய வந்த எஸ்.வி.சேகரால் பரபரப்பு

சட்டசபை வரை வந்த அவரை அதிமுகவினர் சூழ்ந்து, காலில் விழுந்து சமாதானப்படுத்தி திரும்ப அழைத்துச் சென்றனர்.
நெடுங்காலமாக பாஜகவில் இருந்து வந்தவர் நடிகர் எஸ்.வி.சேகர். கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன் திடீரென அதிமுகவில் சேர்ந்தார். தீவிரமாக கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வந்த அவருக்கு மைலாப்பூர் தொகுதியை ஜெயலலிதா ஒதுக்கினார்.
அவரை எதிர்த்து நடிகர் நெப்போலியன் நிறுத்தப்பட்டார். திமுகவின் தீவிரப் பிரசாரத்தையும் மீறி எஸ்.வி.சேகர் வெற்றி பெற்றார்.
அதன் பிறகு ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக செயல்பட்டு வந்தார் சேகர். தனது தொகுதி மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க பல்வேறு நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டது தொகுதியில் நல்ல பெயரைப் பெற்றுக் கொடுத்தது.
இணையதளம், இ-மெயில், செல்போன் என பல்வேறு வழிகளில் தன்னை மக்கள் தொடர்பு கொள்ள வசதி ஏற்படுத்தியிருந்தார் எஸ்.வி.சேகர்.
இந் நிலையில், அதிமுகவின் நிலையாமை தத்துவத்தின்படி திடீரென ஜெயலலிதாவின் நம்பிக்கைப் பட்டியலிலிருந்து சேகர் கழற்றி விடப்பட்டார். இருந்தாலும் கூட அதிமுக தொடர்பான கூட்டங்கள், போராட்டங்களில் தொடர்ந்து சேகர் பங்கேற்று வந்தார்.
இன்று சென்னையில் நடந்த அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டங்களுக்கு எஸ்.வி.சேகருக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இன்று காலை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள சட்டசபை செயலகத்திற்கு விரைந்தார். இதனால் அவர் ராஜினாமா செய்யப் போவதாக தகவல் பரவியது.
இதையடுத்து ஏராளமான பத்திரிகை நிருபர்களும், போட்டோகிராபர்களும் தலைமை செயலகத்தில் கூடினர். காலை 10.30 மணிக்கு எஸ்.வி.சேகர் அங்கு வந்தார். நேராக சட்டசபை செயலாளர் அறைக்கு சென்றார்.
காலில் விழுந்த நிர்வாகி:
இதையடுத்து அதிமுக நிர்வாகிகள் சிலரும், தொண்டர்களும் அங்கு ஓடினர். சட்டசபை செயலாளரின் அறையை நோக்கிப் போய்க் கொண்டிருந்த எஸ்.வி.சேகரை வழிமறித்த அவர்கள் அவசரப்பட வேண்டாம், பொறுமையாக இருங்கள் என்று சமாதானப்படுத்தினர்.
ஒருவர் கையை பிடித்து இழுத்தார். ஒரு நிர்வாகி சேகரின் காலில் விழுந்து கெஞ்சினார்.
அசிங்கப்படுத்தாதீங்க..:
அவர்களிடம், கையை விடுங்கள். அசிங்கப்படுத்தாதீர்கள் கோபப்பட்ட சேகர் தொடர்ந்து நடந்தார்.
அந்த நிர்வாகிகளில் ஒருவர் செல்போனில் யாரிடமோ தொடர்பு கொண்டு பேசிவிட்டு அதை எஸ்.வி.சேகரிடம் தந்தார்.
சேகரும் அவருடன் பேசினார். அதன்பிறகு எஸ்.வி.சேகரை அதிமுகவினர் ஒரு வழியாக வெளியே அழைத்து வந்தனர்.
பொதுக் குழுவில் பங்கேற்க திடீர் அழைப்பு:
அவருக்கு அதிமுக பொதுக் குழுவில் பங்கேற்குமாறு திடீரென அழைப்பும் வந்து சேர்ந்தது.
காருக்கு பேன்சி நம்பர் வாங்க வந்தேன்...:
இதையடுத்து நிருபர்கள் அவரை சூழ்ந்து கொண்டு எம்.எல்.ஏ. பதவியை ராஜானாமா செய்து வீட்டீர்களா, அதிமுகவில் இருந்து விலகிவிட்டீர்களா என கேட்டபோது,
நான் அதிமுக உறுப்பினராக நீடிக்கிறேன். விலகவில்லை. எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்யவில்லை. என்னைப் பற்றி யாரோ இது போன்ற வதந்தியை பரப்பி இருக்கலாம். புதிதாக கார் வாங்கி இருக்கிறேன். அதற்கு பேன்சி' நம்பர் வாங்கவே கோட்டைக்கு வந்தேன் என்றார்.
பின்னர் அதிமுகவினர் அனைவருமாக சேர்ந்து எஸ்.வி.சேகரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் சட்டசபை செயலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
'பேன்சி நம்பர்' வாங்க வருபவர்களில் காலில் விழுந்தால் 'மோட்சம்' கிடைக்கும் போல...!!!












Click it and Unblock the Notifications