ஓபாமாவுக்கு மேலும் 3 மாகாணங்களில் வெற்றி

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளர்களைத் தேர்வு செய்ய கட்சி மட்டத்திலான மாகாண வாக்கெடுப்பு நடந்து வருகிறது.
இதில் ஜனநாயகக் கட்சியின் பாரக் ஓபாமாவுக்கும், ஹில்லாரி கிளிண்டனுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருவரும் சம பலத்துடன் இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதேசமயம், குடியரசுக் கட்சியில் ஜான் மெக்கெய்ன் நல்ல முன்னணியில் உள்ளதால் அவரே வேட்பாளராக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் நடந்த சூப்பர் செவ்வாய் வாக்கெடுப்பில் பாரக் ஓபாமா அதிக மாகாணங்களில் வென்றார். ஆனால் ஹில்லாரிக்கு அதிக அளவிலான கட்சிப் பிரதிநிதிகளின் வாக்குகள் கிடைத்தன.
ஒட்டுமொத்தமாக பாரக் ஓபாமாக அதிக மாகாணங்களில் வென்றுள்ளார். ஆனால் ஹில்லாரிக்கு அதிக அளவிலான கட்சிப் பிரதிநிதிகளின் வாக்குள் உள்ளன. இருவரும் வாக்குகள் அடிப்படையில் பெரிய அளவில் வேறுபடாமல் கிட்டத்தட்ட சம நிலையில் உள்ளனர்.
இந்த நிலையில் விர்ஜீனியா, மேரிலாண்ட் மற்றும் டிஸ்ட்ரிக்ட் ஆப் கொலம்பியா ஆகிய மாகாணங்களில் இன்று நடந்த வாக்கெடுப்பில் பாரக் ஓபாமாவின் கை வலுவாக ஓங்கியது. மூன்று மாகாணங்களிலும் அவர் அபாரமாக வென்றார்.
இதனால் ஹில்லாரிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கருப்பர் இனத்தவர், நன்கு படித்தவர்கள், பெரும் பணக்காரர்கள் அதிகம் உள்ள இந்த மூன்று மாகாணங்களிலும் ஓபாமாவுக்குக் கிடைத்துள்ள வெற்றி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பபடுகிறது.
மேலும், ஹில்லாரிக்கு சாதகமான சில பிரிவு வாக்குகளையும் இந்த வாக்கெடுப்பில் ஓபாமா பறித்துள்ளார். மேலும் வெள்ளை இனத்தவரின் வாக்குகளையும் கணிசமான அளவுக்கு ஓபாமா பிரித்துள்ளார். இது ஹில்லாரி தரப்புக்கு ெபரும் கிலியை ஏற்படுத்தியுள்ளது.
மேரிலாண்ட் மாகாணத்தில் ஓபாமாவுக்கு ஊரக வாக்காளர்களும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் பெருமளவில் வாக்களித்துள்ளனர்.
விர்ஜீனியாவில் 60 சதவீத வாக்குகளுக்கு மேல் ஓபாமாவுக்குக் கிடைத்துள்ளது.
இன்றைய வாக்கெடுப்பின் முடிவில் ஓபாமாவுக்கு 958 கட்சிப் பிரதிநிதிகளின் வாக்குகள் கிடைத்துள்ளன. ஹில்லாரிக்கு 904 வாக்குகள் கிடைத்துள்ளன. வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட வேண்டுமானால் 2025 வாக்குகள் இருக்க வேண்டும். ஆனால் இருவருமே அந்த அளவுக்கு வாக்குளுடன் இல்லாததால், சூப்பர் பிரதிநிதிகள் வாக்கெடுப்பை நோக்கி இருவரும் விரைவாக போய்க் கொண்டிருக்கின்றனர்.
மறுபக்கம் குடியரசுக் கட்சியின் ஜான் மெக்கெய்ன், 3 மாகாணங்களிலும் வெற்றி பெற்று தனது நிலையை மேலும் வலுவாக்கிக் கொண்டுள்ளார்.
அடுத்து மார்ச் 4ம் தேதி டெக்சாஸ் உள்ளிட்ட இரு மாகாணங்களில் வாக்கெடுப்பு நடக்கிறது. அதிலாவது வெற்றி பெற வேண்டும் என்று ஹில்லாரி முனைப்புடன் உள்ளார்.












Click it and Unblock the Notifications