போலீஸ்-தாதாக்கள் ரகசிய தொடர்பு: ராமதாஸ் குற்றச்சாட்டு
திண்டிவனம்: காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் தாதாக்களுக்கும் இடையே ரகசிய தொடர்பு உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
திண்டிவனத்தையடுத்த தைலாபுரம் தோட்டத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் வேளாண்மைக்கு தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் நீர்ப்பாசனத் துறைக்கு தனி அமைச்சர்கள் உள்ளது போல், தமிழகத்திலும் தனி அமைச்சர் நியமனம் செய்ய வேண்டும். வேளாண்மை, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றிற்கு அதிக நிதி ஒதுக்க, தாங்கும் திறன் உள்ளவர்கள் மீது வரி போடலாம்.
தர்மபுரி போலீஸ் நிலைய துப்பாக்கி கொள்ளையில் போலீசார் அப்பாவி பொதுமக்களை அழைத்து சென்று அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறும்போது, அப்பாவி மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதையும், எந்த விதத்திலும் மனித உரிமை மீறக் கூடாது என்பதையும், உளவுத் துறை, போலீசாருக்கு அறிவுறுத்த வேண்டும்.
சட்டம், ஒழுங்கு சீர் குலைந்து விட்டது என்று தமிழக ஆட்சி மீது புகார் கூறப்படுகிறது. ஆளும் கட்சியினர் சட்டம், ஒழுங்கு முன்பை விட நன்றாக உள்ளது என்று பதில் கூறுகின்றனர். ஆக, தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு திருப்தியாக இல்லை என்பது மட்டும் வெளிப்படையாக தெரிகிறது. இதற்கு, சமீபத்திய உதாரணம் சென்னை எம்.சி.,ராஜா மாணவர் விடுதியில் வெளி ஆட்கள் புகுந்து மாணவர்களை தாக்கியதாகும்.
போலீசில் அரசியல் குறுக்கீடு என்பது எந்த அளவு உண்மையோ அந்த அளவு தாதாக்கள் என்று கூறப்படும் பெரும் குற்றவாளிகளுக்கும், போலீசில் உயர் அதிகாரிகளுக்கும் இடையே ரகசிய தொடர்பு இருப்பதும் உண்மை.
துணிச்சலான நடவடிக்கைகளை எடுக்கும் முதல்வர் கருணாநிதி, போலீஸ் சீர்திருத்தத்திலும் துணிச்சலான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம், கெட்டுப் போன ஈரலுக்கு சிகிச்சை அளித்து செம்மைப்படுத்த வேண்டும்.
திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்களில் அரசியல்வாதிகளுக்கும், தாதாக்களுக்கும் ரியல் எஸ்டேட் போன்ற விவகாரங்களில் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதை நான் முதல்வர் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். பாமக, கட்சி நிர்வாகிகள் மீது பொய் வழக்குப் போட்டதை கண்டித்து, பெரம்பலூரில் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. உண்ணாவிரதம் இருக்கவும் அனுமதி மறுக்கப்பட்டது.
அரசுக்கு ஆதரவு தரும் ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சிக்கு, தன்னுடைய ஜனநாயக கடமையை ஆற்ற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நாங்கள் இதற்காக உயர் நீதிமன்றத்தை நாடக் கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றார் ராமதாஸ்.