அரசு கேபிள் டிவி நாளை முக்கிய ஆலோசனை

முதல்வர் கருணாநிதியின் மகன் அழகிரி-தயாநிதி மாறன் இடையே மோதல் எழுந்த பின் தமிழகத்தில் உள்ள கேபிள் இணைப்புகளை ஒழுங்குபடுத்தி வீடுகளுக்கு கேபிள் இணைப்புகளை வழங்க அரசே கேபிள் டிவி கழகத்தை நடத்த தீர்மானித்தது. இதற்காக அரசு கேபிள் டிவி கழகம் என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டது.
இதன் மூலம் சன் டிவியின் சுமங்கலி கேபிள் நெட்வொர்க்கின் (எஸ்.சி.வி) ஆதிகத்தை ஒடுக்க திட்டமிடப்பட்டது.
அரசு கேபிள் டிவி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக பிரேஜஷ்வர் சிங் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். நிதித்துறை, தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர்கள், எல்காட் நிர்வாக இயக்குநர், தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் உள்ளிட்டோர் இயக்குநர்களாக இடம்பெற்றுள்ளனர்.
ஆனால், திடீரென இந்த கேபிள் டிவி கழகம் தொடங்குவது தொடர்பான பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இதனால் அழகிரி-மாறன் இடையே ஏதோ ஒப்பந்தம் ஏற்பட்டுவிட்டதாகக் கருதப்பட்டது.
இதற்கிடையே டி.டி.எச் சேவை தொடர்பாக சன்-கலைஞர் டிவி இடையே பின்னணியில் மோதல் எழுந்தது. இந்த சேவையை யார் குறைந்த கட்டணத்தில் வழங்குவது என்பதில் போட்டா போட்டி ஏற்பட்டது.
இந் நிலையில் தான் திடீரென சுமங்கலி கேபிள் விஷனுக்கு போட்டியாளரான ஹாத்வே நெட்வோர்க்குக்கு அரசின் ஆதரவும் அழகிரியின் ஆதரவும் கிடைத்ததாகத் தெரிகிறது. இதனால் எஸ்சிவி ஆபரேட்டர்களை போலீசார் கூட்டிச் சென்று ஹாத்வேயில் சேருமாறு வலியுறுத்தி வருவதாக புகார் எழுந்தது.
இது முதல்வருக்கே தெரியாமல் நடக்கும் அராஜகம் என தயாநிதி மாறன் சென்னை போலீஸ் கமிஷ்னரிடம் புகார் தந்தார்.
இந் நிலையில் கிடப்பில் போடப்பட்ட அரசு கேபிள் கார்ப்பரேசனை துவக்கும் பணிகள் மீண்டும் சூடுபிடித்துள்ளன.
கேபிள் இணைப்புகளை எந்த வகையில் வழங்குவது என்பது குறித்து விவாதித்து முடிவெடுக்க நாளை முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை கேபிள் டிவி கழகம் கூட்டியுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பல்வேறு கேபிள் டிவி ஆபரேட்டர்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். நாளை மாலை தலைமைச் செயலகத்தில் இக்கூட்டம் நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications