தமிழகத்தி்ல் சொத்து வரி உயர்கிறது?
சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குட்பட்ட பகுதிகளில் ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய சொத்து வரி விகிதம் அமல்படுத்தப்படவுள்ளது.
சொத்து வரி உயருவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்துக்கள் குறித்து அதன் உரிமையாளர்கள் தாக்கல் செய்யும் சுய நிர்ணய மதிப்பீட்டின் அடிப்படையில் புதிய சொத்து வரி விகிதம் நிர்ணயிக்கப்படவுள்ளது.
சொத்துக்களின் விவரங்கள் சரியாக தரப்பட்டுள்ளனவா என்பதை பில் கலெக்டர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்கள் உள்ளிட்டோர் சரி பார்ப்பார்கள்.
குடியிருப்புகளுக்கு 25 சதவீதத்திற்கு மேல் வரி விதிக்கக் கூடாது என உச்சவரம்பு விதிக்கப்பட்டுள்ளது. தொழில் தொடர்பான கட்டடங்களுக்கு 100 சதவீதத்திற்கு மேலும், வணிக ரீதியிலான கட்டடங்களுக்கு 150 சதவீதத்துக்கு மேல் சொத்து வரி இருக்காது.
மேலும், கட்டடங்களின் தரத்தைப் பொறுத்தும், மதிப்பைப் பொறுத்தும் பழைய கட்டடங்களுக்கு வரிக் குறைப்பு செய்யப்படும். 5 முதல் 15 ஆண்டு வரையிலான கட்டடங்களுக்கு 10 சதவீதமும், 15 ஆண்டுகள் பழமையான கட்டடங்களுக்கு 15 சதவீதமும், 25 ஆண்டுகளுக்கு மேலான பழைய கட்டடங்களுக்கு 20 சதவீதமும் வரிக் குறைப்பு தரப்படும்.
இதுதவிர நகர்ப்புறங்களில் உள்ள ஸ்டார் ஹோட்டல்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், பல்பொருள் வணிக வளாகங்கள், குளிர்சாதன வசதி கொண்ட கல்யாண மண்டபங்கள் போன்றவற்றுக்கு தனியாக சொத்து வரி விதிக்கப்படும்.
புதிய வரி விகிதத்தின்படி சொத்து வரி உயரும் வாய்ப்பு உள்ளது. அதேசமயம் மக்களை வாட்டி வதைக்கும் அளவுக்கு வரி உயர்வு இல்லாமல் பார்த்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.