அமைச்சர் முற்றுகை-திமுக நிர்வாகி நீக்கம்
கூடலூர்: தமிழக கதர் வாரியத் துறை அமைச்சர் ராமச்சந்திரனை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய விவகாரத்தில் திமுக நிர்வாகி கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார்.
தமிழக கதர்வாரியத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூடலூரில் ஒரு திருமண விழாவுக்கு வந்தார். தனது ஆதரவாளர்களுடன் அவர் தங்கியிருந்தார்.
அப்போது அங்கு திடீரென தனது ஆதரவாளர்களுடன் வந்த கூடலூர் திமுக ஒன்றியச் செயலாளர் லியாகத் அலி மற்றும் ஆதரவாளர்கள் அமைச்சரிடம் ஒன்றிய அலுவலகத்திற்கு வராமல் எப்படி வேறு இடத்தில் தங்கலாம் என அமைச்சரிடம் வாக்கு வாத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தனது காரில் ஏறி செல்ல முயன்ற அமைச்சரை லியாகத் அலி ஆதரவாளர்கள் சுற்றி வளைத்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் இங்கு பதட்டம் உருவானது. இதையடுத்து போலீஸார் பலத்த பாதுகாப்புடன் அமைச்சரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த அமைச்சரின் எதிர்ப்பாளர்கள் அமைச்சரின் கார் கண்ணாடியை அடித்து உடைத்தனர். இதில் கார் சேதமடைந்தது. பின்னர் விழா முடிந்து வெளியே வந்தபோது ராமச்சந்திரனை தாக்கவும் முயற்சி நடந்தது. ஆனால் போலீஸார் சமயோஜிதமாக அதைத் தடுத்து விட்னர்.
இந்த சம்பவம் தொடர்பாக அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரியான மணிகண்டன், கூடலூர் காவல் நிலையத்தில் கூடலூர் திமுக ஒன்றியச் செயலாளர் லியாகத் அலி மீதும் அவரது ஆதரவாளர்கள் மீதும் புகார் கொடுத்தார். அதன் பேரில் லியாகத் அலி மீதும் அவரது ஆதரவாளர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் அமைச்சர் ராமசந்திரன் கார் கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்ட லியாகத் அலி மற்றும் அவருடன் இணைந்து செயல்பட்ட இன்னொரு கட்சி நிர்வாகி ஆகியோரை கட்சியை விட்டு சஸ்பெண்ட் செய்து திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான அன்பழகன் உத்தரவிட்டுள்ளார்.