பழிக்குப் பழி கொலை-2 பேர் சாவு: கல்லிடைக்குறிச்சியில் போலீஸ் குவிப்பு
நெல்லை: தங்களது சகோதரனைக் கொன்றவர்களை பழிக்குப் பழி வாங்கப் போன சகோதரர்களும் கொலை செய்யப்பட்டனர்.
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த சித்ரபுத்திரனின் மகன்கள் சுப்பிரமணியன், இசக்கி முத்து, பெருமாள், பாபநாசம்.
இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணனின் மகன் பெருமாள் பாண்டி என்பவர் குடும்பத்துக்கும் முன் விரோதமும், நீதிமன்றத்தில் மோதல் வழக்குகளும் இருந்து வந்தன.
இந் நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பெருமாள் பாண்டி, அவரது உறவினர்கள் கந்தன், மகேஷ், குமார், முருகன் ஆகிய 5 பேரும் சேர்ந்து சுப்பிரமணியனை வெட்டிக் கொலை செய்தனர்.
இதையடுத்து கைதான 5 பேரும் நிபந்தனை ஜாமீனில் சமீபத்தில் தான் வெளியில் வந்தனர். இவர்கள் தினமும் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும்.
நேற்று இவர்கள் 5 பேரும் கையெழுத்து போட்டு விட்டு, ஊர் திரும்புவதற்கு பாதுகாப்பாக மாரியப்பன், முத்துபாண்டி, பாளையம், கோபால் ஆகியோரையும் அழைத்துக் கொண்டு நேற்றிரவு 11 மணியளவில் சாத்தான்குளம் புதிய பஸ் நிலையம் வந்தனர்.
அங்கு இவர்களை பழிக்கு பழி வாங்க கொலை செய்யப்பட்ட சுப்பிரமணியனின் சகோதரர்கள் இசக்கி முத்து (31), பெருமாள் (38), பாபநாசம் (27) மற்றும் சேது ராமன் (38) ஆகியோர் ஒரு காரில் ஆயுதங்களுடன் காத்திருந்தனர்.
இந்த 8 பேரும் சாத்தான்குளம் பஸ் நிலையம் வந்ததும், இசக்கி முத்து கோஷ்டியினர் அவர்களை சுற்றி வளைத்து, விரட்டி விரட்டி அரிவாள்களால் வெட்டியது.
அப்போது பெருமாள் பாண்டி கோஷ்டியினரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் எதிர் கோஷ்டியை சரமாரியாக தாக்கினர்.
இந்தத் தாக்குதலில் பழி வாங்க வந்த பெருமாள் (38) அவரது தம்பி பாபநாசம் (27) ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே வெட்டுப்பட்டு பலியாயினர்.
அவர்களுடன் வந்த மற்றொரு சகோதரர் இசக்கி முத்து (31), உறவினர் சேதுராமன் (38) ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.
பெருமாள் பாண்டி கோஷ்டியில் மகேஷ் என்பவர் படுகாயமடைந்தார். மற்றவர்கள் சிறு காயங்களுடன் தப்பிவிட்டனர்.
தப்பி ஓடிய கொலையாளிகளை பிடிக்க தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. கல்லிடைக்குறிச்சியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இரண்டு தரப்பினரின் வீடுகளும் அருகருகே உள்ளதால் அசம்பாவிதம் ஏற்படுவதைத் தடுக்க 24 மணி நேரமும் போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர்.
குற்றாலத்தில் கேரள நபர் கொலை:
இதற்கிடையே குற்றாலம் அருகே 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் நிர்வாண நிலையில் பிணமாகக் கிடந்தார்.
பழைய குற்றாலம் அருகேயுள்ள மறவன் குளம் பகுதியில் கிடந்த அவரது உடலில் காயங்கள் உள்ளன. இவர் கேரளத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.