கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம்-ஜெவுக்கு கருணாநிதி சூடு
சென்னை: முதல்வர் கருணாநிதி இன்று மகாபலிபுரம் சென்றார்.
அவருடன் நிதிதுறைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளும் சென்றனர். அவர்களுடன் தமிழக பட்ஜெட் குறித்த ஆலோசனைகளில் கருணாநிதி ஈடுபட்டார்.
கோட்டையில் இடையூறில்லாமல் பணியாற்றுவது கடினம் என்பதால் அவர் தனது டீமுடன் மகாபலிபுரம் சென்றதாகக் கூறப்படுகிறது. அடுத்த மாதம் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதாவுக்கு 'குட்டு':
இந் நிலையில் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில்,
கேள்வி: ரயில்வே பட்ஜெட்டை அனைவரும் பாராட்டும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா மட்டும் குறை கூறியிருக்கிறாரே?
பதில்: குறைதான் சொல்ல வேண்டுமென்ற எண்ணத்தோடு அவர் சொல்லியிருக்கிறாரே தவிர, அவரது குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை. காரைக்குடியிலிருந்து ராமநாதபுரம், தூத்துக்குடி வழியாக கன்னியாகுமரி வரை புதிய ரயில் பாதைக்கான சர்வே மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் அறிவித்திருக்கிறாரே, அது தென் மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளுக்கான வளர்ச்சிக்காக அல்லவா?
கேள்வி: புதிய ரயில் திட்டங்கள், புதிய ரயில் பாதைகளை அமைத்தல் போன்றவற்றுக்கான நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவாக உள்ளதாகவும் ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?
பதில்: புதிய ரயில் திட்டங்கள் மற்றும் புதிய ரயில் பாதைகளை அமைப்பதற்காக சென்ற ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தமிழ் நாட்டிற்காக மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை ரூ. 1,075 கோடி.
ஆனால் இந்த ஆண்டு சென்ற ஆண்டை விட 25 சதவீதம் அதிகமாக அதாவது ரூ.1,327 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாடு தழுவிய அளவில் மொத்தம் 94 மேம்பாலங்களும், சுரங்கப் பாதைகளும் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அதில் தமிழகத்திற்கு மட்டும் நான்கில் ஒரு பகுதியாக 25 மேம்பாலங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டை குறை கூறியுள்ள ஜெயலலிதா இதை விட அதிகமாக எந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு பலன் கிடைத்தது என்ற விவரத்தையும் கூறினால் நல்லது.
ரயில் கட்டணம் ஒவ்வொரு ஆண்டும் உயர்த்தப்பட்டு வந்ததைதான் கடந்த காலங்களில் நாம் கண்டிருக்கிறோம். ஆனால் இதுவரை இல்லாத அளவிற்கு ரயில் கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
அதிலே கூட ஜெயலலிதா குளிர் சாதனக் கட்டணத்தை 7 சதவீதத்திற்கு குறைக்கலாமா என்று கேட்டிருக்கிறார். தற்போது விமானக் கட்டணம் மிகவும் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதனுடன் போட்டியிட வேண்டிய கட்டத்தில் குளிர் சாதனப் பெட்டிகளுக்கான கட்டணத்தை அதிக அளவிற்குக் குறைத்தால்தான் அதனைச் சந்திக்க இயலும் என்பதால்தான் 7 சதவிகிதக் கட்டணக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
எனவே ஆகாத கணவன் கைபட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம் என்ற மனப்பான்மையில் குறை கூற வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா குற்றம் சாட்டியிருக்கிறாரே தவிர, அதிலே எந்தவிதமான உண்மையும் கிடையாது.
நாடு முழுவதும் உள்ள ஓட்டு வங்கியை மனதில் கொண்டு மூத்தகுடி மக்கள், பெண்கள், மாணவிகளுக்கு சில சலுகைகளை அறிவித்துள்ளதாக ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். பாவம், வாக்கு வங்கியைப் பற்றி கவலைப்படாமல், அடுத்த தேர்தலைப் பற்றிக் கவலைப்படாமல், அடுத்த தலைமுறையைப் பற்றியே அல்லும் பகலும் பாடுபடுபவர் அல்லவா இந்த அம்மையார் என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications