அமைதிப் பேச்சு: இலங்கை தமிழர் கட்சி கோரிக்கை
கொழும்பு: அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழர் தேசிய கூட்டணி எம்.பி. ஸ்ரீகந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இலங்கை அரசு அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை முறையாக அமல்படுத்த முன்வர வேண்டும். கொழும்பையும், யாழ்ப்பாணத்தையும் இணைக்கும் ஏ9 சாலையைத் திறக்க முன்வர வேண்டும்.
அப்படி செய்ய இலங்கை முன்வந்தால், விடுதலைப் புலிகள் இயக்கத்தை சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தைக்கு கொண்டு வர தமிழர் தேசியக் கூட்டணி முயற்சிக்கும்.
நாங்கள் மக்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். விடுதலைப் புலிகளை சமாதானப்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். ஆனால் அரசுதான் அதற்கான முன் நடவடிக்கைகளை தொடங்க வேண்டும்.
வடக்கிலும்,தெற்கிலும் உள்ள மக்கள் எந்த நேரமும் அச்ச உணர்வுடன் வாழ்வது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. எனவே மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டியது அவசியமாகும். அதற்கு இதுதான் சரியான நேரமாகும்.
மூடப்பட்ட ஏ9 நெடுஞ்சாலையை மீண்டும் திறப்பதன் மூலம் வடக்கில் உள்ள தமிழர்களின் பொருளாதார நிலைமை சீர்படும். இதை நல்லெண்ண நடவடிக்கையாக இலங்கை அரசு எடுக்க வேண்டும்.
இந்த சாலையைத் திறப்பதன் மூலம் வடக்கில் உள்ள தமிழர்களின் துயரம் அகலும், அவர்களின் வாழ்க்கை சகஜ நிலைக்கு வரும்.
இந்த முடிவை இலங்கை அரசு எடுத்தால், விடுதலைப் புலிகளை பேச்சுவார்த்தைக்கு இட்டு வர முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்றார் அவர்.
தமிழர் தேசிய கூட்டணி, விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவான கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications