மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேறியதற்காக மொட்டை போட்ட காங்கிரஸ் எம்.பி!
திண்டுக்கல்: மக்களுக்கான நலத்திட்டங்கள் நிறைவேறியதற்காக மொட்டை போட்ட காங்கிரஸ் எம்.பி. கார்வேந்தனுக்கு மக்கள் அனைவரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
பழநி - ஈரோடுக்கும் இடையே ரயில் பாதை அமைக்க வேண்டும் என்பது அந்தப் பகுதி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும்.
இவர்கள் தங்களது கோரிக்கையை அரசுக்கு தெரியப்படுத்தும் வகையில் உண்ணாவிரதம், சாலை மறியல், ஆர்பாட்டம் போன்ற பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
இந்த நிலையில் பழநி - ஈரோடு ரயில் பாதை திட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரி பழநி எம்.பி. கார்வேந்தன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஈரேட்டில் இருந்து பழநிக்கு பாதயாத்திரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய எம்.பி. கார்வேந்தன் இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்காவிட்டால் பழநியில் இருந்து சென்னையில் உள்ள ரயில்வே அலுவலகத்திற்கு பாதயாத்திரை செல்ல நேரிடும் என எச்சரித்தார்.
இந்த நிலையில் பழநி - ஈரோடு புதிய ரயில்பாதை அமைக்க மத்திய ரயில்வே பட்ஜெட்டில் ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ரூ.288 கோடி ஒதுக்கினார்.
இதனால் உற்சாகம் அடைந்த பழநி காங்கிரஸ் எம்.பி. கார்வேந்தன் தனது கோரிக்கையை நிறைவேறியதற்கு காரணம் பழநி முருகன் தான். எனவே தான் பழநி முருகனுக்கு மொட்டை போடுவதாக கூறி பழநிக்கு சென்று முருகனுக்கு மொட்டை போட்டார்.
மக்கள் நலத்திட்டங்களுக்காக மொட்டை போடும் கார்வேந்தன் எம்.பி.க்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications