ஹர்பஜன் மீது தவறில்லை - ஐசிசி அறிவிப்பு
சிட்னி: ரசிகர்களைப் பார்த்து குரங்கு போல சைகை செய்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விடுவித்து விட்டது.
சிட்னியில் நடந்த இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது இறுதிப் போட்டியின்போது பார்வையாளர்களைப் பார்த்து குரங்கு போல சைகை செய்ததாக ஹர்பஜன் மீது ஆஸ்திரேலிய மீடியாக்கள் புகார் கூறின.
இதுகுறித்து ஐசிசி போட்டி நடுவர் ஜெப் குரோ விசாரணை நடத்தினார். விசாரணையின் இறுதியில் ஹர்பஜன் மீது நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை என்ற முடிவுக்கு குரோ வந்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ஹர்பஜன் குறித்து மீடியாக்களில் வந்தசெய்தியைத் தொடர்ந்துஅதுகுறித்து விசாரிக்கப்பட்டது. விசாரணையில் ஹர்பஜனின் செயலில் உள்நோக்கம் இல்லை என்று தெரிய வந்தது. மேலும், அவர் மீது விசாரணை நடத்தத் தேவையில்லை என்ற முடிவுக்கும் ஐசசிசி வந்துள்ளது என்று கூறியுள்ளார் குரோ.
இந்த தீர்ப்பு குறித்து ஹர்பஜன் சிங் கருத்து தெரிவிக்கையில், நான் எந்தத் தவறும் செய்யவில்லை. உண்மையில் ரசிகர்கள்தான் என்னைக் கிண்டல் செய்தனர். என்னை சவரம் செய்யுமாறும், தலையில் போட்டுள்ள குடுமியை கழற்றிக் காட்டுமாறும் மத ரீதியாக புண்படுத்தும் வார்த்தைகளை உச்சரித்தனர்.
அப்போது எனது காதுகளிலிருந்து புகை வருவது போல உணர்ந்தேன். அந்த அளவுக்கு எனது மனதை அவர்கள் புண்படுத்தினர். எல்லா வகை நாகரீகத்தையும் தாண்டியிருந்து அவர்களது செயல்.
இருப்பினும் நான் அதை பெரிதுபடுத்த விரும்பவில்லை. எனது முழுக் கவனமும் போட்டியில்தான் இருந்தது என்றார் ஹர்பஜன்.