தமிழில் பாடியதால் 'தீட்டு': தீட்சிதர்கள் பரிகாரம்-ராமதாஸ் கண்டனம்
சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேவாரம் பாடியதால் தீட்டு ஏற்பட்டு விட்டதாக கூறி தீட்சிதர்கள் பரிகார பூஜை செய்துள்ளனர். இது உண்மையானால் அந்த தீட்சிதர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிதம்பரம் நடராஜர் கோவிலில், இந்து அறநிலையத்துறையின் சட்டப்பூர்வமான அனுமதியுடன் தமிழில் தேவாரம் பாடச் சென்ற ஓதுவார் ஆறுமுகச்சாமியும், காவல் துறையினரின் அனுமதியோடு, அவருடன் கோவிலுக்குள் சென்றவர்களும், அக்கோவில் பூசாரிகளான தீட்சிதர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு தாக்கப்பட்டிருக்கிறார்கள். காவலர்களையும் தீட்சிதர்கள் தாக்கியுள்ளனர்.
இத்தனையும் நடத்தி விட்டு அங்கே சிற்றம்பலத்தில் தமிழில் தேவாரம் பாடியதால், அந்த இடம் தீட்டப்பட்டு விட்டதாக கூறி தீட்டுக் கழிப்பு பரிகார பூஜையையும் நடத்தியிருக்கிறார்கள் என்றெல்லாம் செய்திகள் வந்திருக்கின்றன. இது உண்மையானால் தீட்சிதர்களின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது.
முன்பு ஒரு காலகட்டத்தில் அப்போதைய தீட்சிதர்களால் மறைத்து வைக்கப்பட்டதாக சொல்லப்படும் தேவார திருமறைகளை சோழப் பேரரசர் ராஜராஜ சோழன் வெளியே கொண்டு வந்தார் என்று வரலாறு கூறுகிறது.
அன்று முதல் 60 ஆண்டுகளுக்கு முன்பு வரையில், இக்கோவில் சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடி வழிபாடு நடந்து வந்திருக்கிறது. அதன் பிறகுதான் தீட்சிதர்களின் பிடிவாதம் காரணமாக அங்கே தமிழில் தேவாரம் பாடுவது நிறுத்தப்பட்டிருக்கிறது.
தில்லை நடராஜர் கோவில் தமிழர்களால் எழுப்பப்பட்டுள்ள தமிழ்த் திருக்கோவில். அங்கே தேவாரம் என்னும் தெய்வ தமிழ்ப் பாடல்கள் பாடப்படுவதை தடுப்பது என்பது தமிழினத்திற்கு விடப்பட்டுள்ள சவால். இதனை தமிழர்கள் எப்படிப் பொறுத்துக் கொள்வார்கள். நீண்ட நெடிய சட்டப் பிரச்சினைக்குப் பிறகு இப்போது அங்கே தமிழில் தேவாரம் பாடலாம் என்ற உரிமை நிலை நாட்டப்பட்டிருக்கிறது.
சிவனடியார்கள் அவர்களின் விருப்பம் போல தமிழில் தேவாரம் பாடி சிவனை வழிபடலாம் என்றும் அப்படிப் பாடக் கூடாது என்று தடுப்பது சிவனடியார்களின் வழிபாட்டு உரிமையை பறிப்பதாகும் என்று இந்து அறநிலையத்துறை மிகச் சரியான முடிவினை எடுத்து அறிவித்திருக்கிறது.
நடராஜர் கோவில் சிற்றம்பலத்தில், ஆறுமுகச்சாமி ஓதுவார் மட்டுமல்ல, விரும்புகின்ற சிவனடியார்கள் எல்லோரும் தமிழில் தேவாரம் பாடி வழிபடுவதற்கான சட்டப்பூர்வமான உரிமையை நிலைநிறுத்தும் நடவடிக்கையை இந்து அறநிலையத்துறையும், அதற்கு உறுதுணையாக தமிழக அரசும் உறுதியுடன் மேற்கொள்ள வேண்டும். அதைத் தடுப்போர் மீது அவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கையை காவல்துறை மேற்கொள்ள வேண்டும்.
ஆறுமுகச்சாமி ஓதுவாரையும், அவருக்குப் பாதுகாப்பாக சென்றவர்களையும் எந்தவித நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். தமிழில் தேவாரம் பாடியதால் திருச்சிற்றம்பலம் தீட்டுப் பட்டு விட்டதாக கூறி பரிகாரம் நடத்திய தீட்சிதர்களைக் கைது செய்ய வேண்டும்.
இந்த நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் தமிழர்களின் தன்மானத்தையும், தமிழின் உரிமையையும் காக்க அறநிலையத்துறை முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.