விடைகளுடன் தரப்பட்ட கேள்வித் தாள்!
மதுரை: தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கழகத்தின் ஆய்வக உதவியாளர் பணிக்கு நடந்த தேர்வின்போது, கேள்வித்தாளுடன் பதில்களும் இணைக்கப்பட்டு கொடுக்கப்பட்டதால், தேர்வை எழுதியவர்கள் தங்கு தடையின்றி கடகடவென்று பரீட்சை எழுதிய கூத்து நடந்துள்ளது.
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கழகத்தில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்ய மதுரையில் எழுத்துத் தேர்வு நடந்தது.
இதில் 60 பெண்கள் உள்பட 96 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். வினாத்தாள் கொடுக்கப்பட்டதும், அதை வாங்கிப் புரட்டிப் பார்த்த, தேர்வுக்கு வந்திருந்த சிலரது முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம்.
எந்தவித படபடப்பும் இல்லாமல் விறுவிறுவென தேர்வு எழுத ஆரம்பித்தனர். தயக்கம் இல்லாமல் கடகடவென்று, சந்தோஷத்துடன் தேர்வு எழுதிய அவர்களைப் பார்த்து தேர்வுக் கண்காணிப்பாளருக்கு சந்தேகம் வந்தது.
அவர்களிடம் சென்று கேள்வித்தாளை வாங்கிப் பார்த்த அவருக்கு பெரும் அதிர்ச்சி. காரணம், கேள்வித்தாளுக்குப் பின்னால், அதற்குரிய விடைகள் அடங்கிய ஒரு தாளும் இடம் பெற்றிருந்தது. அந்த விடைத்தாள், வினாக்களை திருத்துவோருக்கானது. அது கேள்வித்தாளுடன் வந்துள்ளது.
இதையடுத்து தேர்வு நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் மாலையில் மறு தேர்வு வைக்கப்பட்டது. வேறு கேள்வித்தாள் கொடுத்து தேர்வு நடத்தப்பட்டது.
இந்தக் குளறுபடிக்கு யார் காரணம் என்பது குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications