எஸ்.ஆர்.எம். பல்கலையில் சிவாஜி பெயரில் பிலிம் இன்ஸ்டிடியூட்
சென்னை: சென்னை அருகே உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பெயரில் ரூ. 10 கோடி செலவில் புதிய திரைப்பட பயிற்சிக் கழகம் உருவாக்கப்படவுள்ளது.
சென்னை காட்டாங்கொளத்தூரில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு மிலன் 08 என்ற 3 நாள் கலை நிகழ்ச்சி நடந்தது.
இதன் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர்.பச்சமுத்து பேசுகையில், ரூ. 10 கோடி செலவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பெயரில் திரைப்படக் கழகம் உருவாக்கப்படும். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் குடும்பத்தாருடன் இணைந்து இந்த திரைப்பட கழகம் உருவாக்கப்படும்.
வருகிற கல்வியாண்டு முதல் இந்த திரைப்படக் கழகம் செயல்படும். ஒரு கல்வி நிறுவனத்தில், திரைப்படக் கழகம் தொடங்கப்படுவது இதுவே முதல் முறையாகும் என்றார் பச்சமுத்து.
இந்த திரைப்படக் கழகத்தின் ஆலோசனைக் குழுவில் திரைத்துறையைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் இடம் பெறவுள்ளனராம். வெளிநாடுகளைச் சேர்ந்த திரைத்துறை பிரபலங்களும் இங்கு வந்து மாணவர்களுக்குப் பாடம் நடத்தவுள்ளனர்.
திரைப்படத் தொழில்நுட்பம் தொடர்பான அனைத்து வசதிகளுடன் கூடியதாக இந்த திரைப்படக் கழகம் செயல்படும்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவாஜி கணேசனின் மூத்த மகனும், சிவாஜி புரடக்ஷன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான ராம்குமார் பேசுகையில், நானும், எனது தம்பி நடிகர் பிரபுவும் இந்த திரைப்படக் கழகத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவோம்.
சர்வதேச தரத்திலான திரைப்படத் தொழில்நுட்ப வசதியுடன் கூடியதாக இந்த கழகம் செயல்படும் என்றார்.