அரசியல் கிரிக்கெட்-ஸ்டாலின் அபார பந்து வீச்சு!

உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் அபாரமாக பந்து வீசி ஆஸ்திரேலிய அணியின் தோல்விக்குக் காரணமாக அமைந்து, சிறந்த பவுலர் விருதையும் தட்டிச் சென்றார்.
சென்னைக்கு விஜயம் செய்துள்ள தெற்கு ஆஸ்திரேலிய பிரதமர் மைக் ரான் தலைமையிலான குழுவினருக்கும், உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக முதல்வர் லெவன் அணிக்கும் இடையே நட்பு ரீதியிலான 20-20 கிரிக்கெட் போட்டி சென்னையில் நேற்று நடந்தது.
தமிழக அணியில், அமைச்சர்கள் பொன்முடி, கே.பி.பி.ராஜா, வெள்ளக்கோவில் சாமிநாதன், பூங்கோதை ஆலடி அருணா, மதிவாணன், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீகாந்த், டி.ஆர்.அரசு, சிவராமகிருஷ்ணன், இந்திய அணி வீரர் திணேஷ் கார்த்திக், நடிகர்கள் ஜீவா, அப்பாஸ், ஸ்ரீகாந்த், ரமேஷ், ஐ.ஏ.எஸ்.அதிகாரி நவ்நீத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஸ்டாலின் தனது அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக திணேஷ் கார்த்திக்கும், அமைச்சர் ராஜாவும் இறங்கினர்.
திணேஷ் கார்த்திக் அட்டகாசமாக ஆட, ராஜா முதல் ஓவரிலேயே அவுட் ஆனார். அதேபோல ஸ்டாலினும் ஒரு ரன் எடுத்தார்.
ஆட்ட நேர இறுதியில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்கள் சேர்த்தது. திணேஷ் கார்த்திக் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பின்னர் தெற்கு ஆஸ்திரேலிய அணி விளையாடியது. தமிழக அணியின் பந்து வீச்சு சூப்பராக இருந்ததால் ரன் எடுக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி தடுமாறியது. குறிப்பாக ஸ்டாலின் சிறப்பாக பந்து வீசினார். 3 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார். வீசிய முதல் பந்திலேயே அவர் முதல் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.
இறுதியில் 123 ரன்களில் ஆஸ்திரேலிய அணி சுருண்டது. தமிழக அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் ஆளுநர் பர்னாலா கலந்து கொண்டு ஸ்டாலின் அணிக்கு கோப்பையை வழங்கினார்.
சிறந்த பந்து வீச்சாளராக ஸ்டாலினும், சிறந்த பேட்ஸ்மேனாக திணேஷ் கார்த்திக்கும், ஆட்ட நாயகனாக ஆஸ்திரேலியாவின் தரீனும், ஆல் ரவுண்டராக ஸ்டீபன் பெர்சனும் தேர்ந்ெதடுக்கப்பட்டனர்.
ஸ்டாலின் அணியில் 4 அமைச்சர்கள் ஒரு ரன் கூட எடுக்க முடியாமல் டக் அவுட் ஆகினர். ராஜா, பொன்முடி, சாமி, மதிவாணன் ஆகியோரே டக் அவுட் ஆனவர்கள். வெள்ளக்கோவில் சாமிநாதன் கஷ்டப்பட்டு 4 ரன்களைச் சேர்த்து கலக்கினார்.
இந்த வித்தியாசமான கிரிக்கெட் போட்டியை திமுகவினர் மட்டுமல்லாது பொதுமக்களும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.












Click it and Unblock the Notifications