தமிழகம்-கர்நாடகம் இடையே பகையை உருவாக்க பாஜக முயற்சி: காங்.
சென்னை: ஓகேனக்கல் பகுதி கர்நாடகாவிற்கு சொந்தமானது என்று கூறி தமிழக-கர்நாடக மாநிலங்களுக்கிடையே பகை உணர்வை உருவாக்க முயற்சிக்கும் பாஜகவின் கர்நாடக மாநிலத் தலைவர் எடியூரப்பாவின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட இருக்கிற ஓகேனக்கல் பகுதி கர்நாடகாவிற்கு சொந்தமானது என்று கூறி தமிழக-கர்நாடக மாநிலங்களுக்கிடையே பகை உணர்வையும், பதட்டத்தையும் உருவாக்க முயற்சிக்கும் பாஜகவின் கர்நாடக மாநிலத் தலைவர் எடியூரப்பாவின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
கடந்த 2005ம் ஆண்டு இது போன்றதொரு தவறான கருத்தைப் பரப்ப முயற்சி நடந்த போது தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் கர்நாடக அதிகாரிகள் ஒன்றிணைந்து இரு மாநில எல்லை வரைபடத்தின் அடிப்படையில் ஆய்வு நடத்தி, ஓகேனக்கல் பகுதி தமிழகத்திற்குத் தான் சொந்தமானது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
அதற்கு முன்னதாக, மொழி வழி மாநிலம் பிரிக்கப்பட்ட காலம் முதலே ஓகேனக்கல் தமிழகப் பகுதியாகவே இருந்து வருவது வரலாற்று உண்மை.
இந் நிலையில் கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சராகவும் இருந்த எடியூரப்பா அமைதியாக உள்ள இரு மாநிலங்களின் உறவை கெடுப்பது மட்டுமல்ல, இந்திய ஒற்றுமை ஒருமைப்பாட்டையே சீர் குலைக்கும் வேலையில் இறங்கியுள்ளார்.
அத்தோடு லட்சக்கணக்கான தமிழக மக்களுக்கான குடிநீர் பிரச்சினை தீர்வுக்கு எதிராகவும் சதி செய்து வரும் அவரது செயலை உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications