ஓகனேக்கலில் மறியல்-கன்னட அமைப்பினர் கைது
சாம்ராஜ் நகர்: ஓகனேக்கல் அருகே, தமிழக அரசின் ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்திய ஓகனேக்கல் ஹொரதா சமிதி மற்றும் ஓகனேக்கல் உலிசி ஹொரதா சமிதி ஆகிய கன்னட அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
தமிழக அரசு ஓகனேக்கலில் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்று கோரி கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதில் பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் மூக்கை நுழைத்துள்ளன.
கர்நாடகத்தில் 7 நாட்கள் முதல்வராக இருந்தவரும், வருகிற சட்டசபைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனவருமான எதியூரப்பா தலைமையில் பாஜகவினர் ஓகனேக்கலுக்குள் அத்துமீறி நுழைந்து சமீபத்தில் சலசலப்பை ஏற்படுத்தினர்.
இந்த நிலையில் இரு கன்னட அமைப்புகள் சார்பில் தமிழக, கர்நாடக எல்லையில், ஓகனேக்களுக்கு அருகில் உள்ள புஞ்சனூர் என்ற இடத்தில் இன்று சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
இதன் காரணமாக தமிழகத்திலிருந்து எந்த வாகனமும் கர்நாடகத்திற்குள் நுழையாமல் தமிழக எல்லையிலேயே நிறுத்தப்பட்டன.
போராட்டம் நடத்திய கன்னட அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
ஓகனேக்கல் குடிநீர்த் திட்டம் கைவிடப்படும் வரை போராட்டம் தொடரும் என கன்னட அமைப்புகள் அறிவித்துள்ளதால், தமிழக, கர்நாடக எல்லையில் பதட்ட நிலை நிலவுகிறது.