இன்டர்நெட் மைய உரிமையாளர் கொலை-கள்ள காதலிக்கு வலை
சென்னை: இன்டர்நெட் மைய உரிமையாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது கள்ளக்காதலி உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை மந்தைவெளி ராபர்ட்சன்பேட்டையில் வசித்தவர் சீனிவாசன் (36). இவரது மனைவி ஜெயக்கொடி. இவர்களுக்கு 10 வயதில் மகன் உள்ளான். மந்தைவெளி ஆர்.கே.மடம் பகுதியில் ஐஸ்கிரீம் பார்லரும் இன்டர்நெட் மையமும் நடத்தி வந்தார்.
அவரது கடையில் வேலை பார்த்த மாலதியுடன் சீனுவாசனுக்கு தொடர்பு ஏற்பட்டது. இன்டர்நெட் மையத்திலேயே மாலதியை தங்க வைத்தார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில் இன்டர்நெட் மையத்துக்கு அருகே டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்த லட்சுமிகாந்தன் என்பருடன் மாலதிக்கு தொடர்பு ஏற்பட்டது.
இதையறிந்த சீனிவாசன், லட்சுமிகாந்தனை அங்கிருந்து காலி செய்தார். ஆனால் மாலதி தனது கள்ளக் காதலை தொடர்ந்தார். இதனால் சீனிவாசன் மாலதியை சந்திப்பதை தவிர்த்தார். இன்டர்நெட் மையத்தையும் காலி செய்ய திட்டமிட்டார். இதனால் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது.
இது தொடர்பாக நீலாங்கரை, பட்டினபாக்கம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் இருவரும் ஒருவர் மீது ஒருவர் புகார் கூறியிருந்தனர்.
இந்நிலையில் மாலதி கொடுத்த வரதட்சணை கொடுமை புகாரில் சீனிவாசனை கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலையானார். தன்னையும் மனைவி ஜெயக்கொடியையும் தாக்க முயன்றதாக சீனுவாசன் கொடுத்த புகாரின் அடிப்படையில் மாலதி கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.
இந் நிலையில் நேற்று மாலை பைக்கில் வந்த சீனிவாசனை வழிமறித்து ஒரு கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியது.
இந்தக் கொலை தொடர்பாக மாலதி, அவரது தம்பி உள்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications