எதியூரப்பாவுடன் தமிழக பாஜக பேச்சு!
வேலூர்: கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக நடந்து வரும் வன்முறைகளை மத்திய அரசு இரும்புக் கரம் கொண்டு தடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
வேலூரில் செய்தியாளர்களிடம் இல.கணேசன் பேசுகையில், ஓகனேக்கல் முழுக்க முழுக்க தமிழகத்தில் உள்ள பகுதி. அங்கு நாம் நிறைவேற்றவுள்ள கூட்டுக் குடிநீர்த் திட்டம் குறித்து கேள்வி கேட்க கர்நாடகத்திற்கு எந்தத் தகுதியும் இல்லை.
தேர்தலுக்காக இந்தப் பிரச்சினையை கர்நாடக அரசியல்வாதிகள் எழுப்புகின்றனர். உடனடியாக பிரதமர் மன்மோகன் சிங் தலையிட்டு தமிழர்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அங்கு தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ளது. எனவே மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். கன்னட வெறியர்களின் தாக்குதலை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.
இந்தப் பிரச்சினை தொடர்பாக கட்சி மேலிடத்திலும், பிரச்சினையை முதலில் ஆரம்பித்து வைத்த கர்நாடக தலைவர் எடியூரப்பாவுடனும் தமிழக பாஜக சார்பில் பேசப்பட்டுள்ளது.
தேசிய ஒருமைப்பாடு இப்போது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. தண்ணீர்ப் பிரச்சினைகளில் நாடு சிதறுண்டு போகாமல் காக்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும் என்றார் இல.கணேசன்.












Click it and Unblock the Notifications