வருகிறது ஒலிம்பிக் ஜோதி - டெல்லியில் குவியும் திபெத்தியர்கள்
டெல்லி:ஒலிம்பிக் ஜோதியின் தொடர் ஓட்டம் வருகிற 17ம் தேதி டெல்லியில் தொடங்கவுள்ள நிலையில் நூற்றுக்கணக்கான திபெத்தியர்கள் டெல்லியில் வந்து குவியத் தொடங்கியுள்ளனர். தொடர் ஓட்டத்தைத் தடுக்கும் பொருட்டு திபெத்தியர்கள் டெல்லியில் குவிந்து வருகின்றனர்.
உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்று கொண்டுள்ள ஒலிம்பிக் ஜோதி வருகிற 17ம் தேதி டெல்லிக்கு வருகிறது. நாட்டின் முக்கிய நகரங்களில் இந்த ஜோதி தொடர் ஓட்டமாக எடுத்துச் செல்லப்படும்.
இந்த நிலையில் நாடு முழுவதிலுமிருந்து திபெத்தியர்கள் டெல்லிக்கு திரண்டு வந்து கொண்டுள்ளனர். தொடர் ஓட்டத்தின்போது போராட்டம் நடத்தவும், தொடர் ஓட்டத்தைத் தடுத்து நிறுத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
திபெத்தியர்களின் போராட்டத்தால் ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் பாதிக்கப்படாமல் இருக்கவும், ஜோதிக்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்கவும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.