மிகப்பெரிய கவலை பண வீக்கம் தான்-ப.சிதம்பரம்
வாஷிங்டன்: பண வீக்கம் தான் நாட்டின் தற்போதைய மிகப்பெரிய கவலையாக இருப்பதாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
வாஷிங்டனில் சர்வதேச நிதியம்- உலக வங்கிக் கூட்டத்தில் கலந்து கொள்ள ப.சிதம்பரம் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவர் அளித்த பேட்டி,
நாட்டின் தற்போதைய மிகப்பெரிய கவலையாக பண வீக்கம் உள்ளது. பண வீக்கத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி எடுத்து வருகிறது.
சில நாடுகளில் இருக்கும் பண வீக்கத்தை ஒப்பிடுகையில், இந்திய பண வீக்கத்தின் அளவு குறைவு தான். உணவு பொருட்கள், கச்சா எண்ணெய் விலை உயர்வால் தான் பண வீக்கம் அதிகரித்துள்ளது.
அதிகபட்ச பொருளாதார வளர்ச்சிக்கு ஏராளமான கச்சா எண்ணெய் மற்றும் பொருட்களை இறக்குமதி செய்கிறோம்.
இதன்மூலம் பண வீக்கத்தையும் சேர்த்தே இறக்குமதி செய்கிறோம்.
ஒரு நாடு அதிகபட்ச வளர்ச்சி அடைய வேண்டுமானால் மிதமான பணவீக்க அதிகரிப்பை எதிர் கொள்ளத்தான் வேண்டும். ஆனால், தற்போது பண வீக்கம் மிகவும் அதிகரித்து விட்டது.
இதனால் விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டுமானால் பொருளாதார வளர்ச்சியை சிறிது மட்டுப்படுத்த வேண்டிய நிலை வருமோ என்ற கவலை எனக்கு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்திருப்பதால் பெரிய பாதிப்பும் ஏதும் இல்லை. நீண்டகால நோக்கில் பார்த்தால், சில கட்டுப்பாடுகளின் கீழ் ஏற்றுமதி செய்வது பற்றி இந்திய ஏற்றுமதியாளர்கள் கற்றுக் கொள்ள முடியும். ஜப்பான், ஜெர்மன் போன்ற நாடுகளின் ஏற்றுமதியாளர்கள், போட்டியை சமாளிப்பது குறித்து கற்றுக் கொண்டுள்ளார்கள். அதே போலவே இந்தியாவும் கற்றுக் கொள்ளும் என்றார் சிதம்பரம்.












Click it and Unblock the Notifications