துபாய் தீ விபத்து- இந்தியர்கள் பாஸ்போர்ட் பெற கட்டணம் ரத்து
துபாய்: துபாயில் சமீபத்தில் நடந்த தீ விபத்தில் பாஸ்போர்ட்டை இழந்த இந்தியத் தொழிலாளர்களுக்கு நகல் பாஸ்போர்ட் வழங்குவதற்கான கட்டணத்தை ரத்து செய்து இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
துபாயின் நைப் சோக் பகுதியில் சமீபத்தில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதில் இந்தியத் தொழிலாளர்கள் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த சிறு வர்த்தகர்களின் பாஸ்போர்ட் உள்ளிட்டட ஆவணங்கள் தீக்கிரையாகி விட்டன.
இந்தநிலையில் இவர்களுக்கு நகல் பாஸ்போர்ட் பெறுவதற்குரிய கட்டணத்தை ரத்து செய்து இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய துணைத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுதொடர்பான உத்தரவை இந்திய வெளியுறவுத் துறை பிறப்பித்துள்ளது.
தீவிபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நகல் பாஸ்போர்ட் உள்ளிட்ட சேவைகளை மே 12ம் தேதி வரை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து சேவைகளும் இலவசமாக மேற்கொள்ளப்படும்.
நகல் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்போர், தீவிபத்து தொடர்பான செய்தித் தாள் விளம்பரம், காவல்துறை அறிக்கையின் நகல் ஆகியவற்றோடு விண்ணப்பித்தால் அவர்களுக்கு நகல் பாஸ்போர்ட்டுக்கான கட்டணம் ரத்து செய்யப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.