திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் பிரதீபா தரிசனம்
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருள்மிகு பத்மனாப சுவாமி கோவிலில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் சுவாமி தரிசனம் செய்தார்.
கேரளாவுக்கு 2 நாள் பயணமாக பிரதீபா பாட்டீல் நேற்று வந்தார். அவரை மாநில ஆளுநர் ஆர்.எல்.பாட்டியா, முதல்வர் அச்சுதானந்தன் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் கேரள சட்டசபை பொன் விழா கொண்டாட்டத்தின் நிறைவு விழாவில் பிரதீபா பாட்டீல் பங்கேற்றார்.
அதந் பின்னர் கல்வியாளர் ஆர்.சங்கரின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டார். முன்னதாக திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு பத்மனாப சுவாமி கோவிலுக்கு சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
சுவாமி சன்னதியில் நின்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். அவருக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
விஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் பத்மநாப சுவாமி கோவிலும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு விஷ்ணு அனந்தசயன கோலத்தில் காட்சி தருவது முக்கியமானது. அனந்தபத்மநாபன் என்ற பெயரும் இங்குள்ள சுவாமிக்கு உண்டு. இக்கடவுளின் பெயரைக் கொண்டுதான் திருவனந்தபுரம் என்ற பெயரும் உண்டானது.
கோவின் வரலாறு குறித்து கேட்டறிந்த பிரதீபா பாட்டீல், அங்கு நடந்து வரும் பூஜை முறைகள் குறித்தும் கேட்டுக் கொண்டார். கேரள பாரம்பரிய உடையான, கசவு சேலை காட்டி பிரதீபா கோவிலுக்கு வருகை தந்தார். சுமார் 20 நிமிடங்கள் கோவிலில் இருந்தார்.












Click it and Unblock the Notifications