எல்லையில் கடும் சண்டை-பாக். தீவிரவாதிகள் ஊடுருவல் முறியடிப்பு
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலம், இந்திய, பாகிஸ்தான் எல்லைப் பகுதியான சம்பாவில் தீவிரவாதிகளின் ஊடுறுவல் முயற்சியை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கடும் சண்டைக்குப் பின்னர் முறியடித்தனர்.
நேற்று நள்ளிரவுவாக்கில் இப்பகுதியில் உள்ள பாகிஸ்தான் எல்லையிலிருந்து இந்தியாவுக்குள் ஊடுறுவ தீவிரவாதிகள் முயன்றனர். இதையடுத்து 112வது பட்டாலியன் எல்லைப் பாதுகாப்புப் படையினர் அவர்களை துப்பாக்கியால் சுட்டுத் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து இரு தரப்பினரும் கடும் துப்பாக்கிச் சண்டையில் இறங்கினர். எல்லைப் பாதுகாப்புப் படையினரை நோக்கி தீவிரவாதிகள் 1000 ரவுண்டு சுட்டனர். மேலும் 16 கையெறி குண்டுகளையும் வீசினர்.
இதில் இந்தியத் தரப்பில் சேதம் ஏதும் ஏற்பட்டதா என்று தெரியவில்லை. இருப்பினும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகளின் ஊடுறுவல் முயற்சிைய வெற்றிகரமாக தடுத்து விட்டனர்.
இந்த சண்டையில் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டனரா என்பது குறித்து தெரியவில்லை. இருப்பினும் பாகிஸ்தானியப் படையினருக்குத் தெரியாமல் ஊடுறுவல் முயற்சி நடந்திருக்க முடியாது என்று இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலைமையை ஆய்வு செய்ய எல்லைப் பாதுகாப்புப் படை இயக்குநர் ஆசிஷ் மித்ரா அங்கு விரைந்துள்ளார்.