விடைத்தாள் நகல்: கல்வி அலுவலகங்களில் மாணவர்கள் கூட்டம்
சென்னை: பிளஸ்டூ விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டல் கோரியும் விண்ணப்பிக்க ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி அலுவலகங்களில் குவிந்தனர்.
பிளஸ்டூ தேர்வெழுதிய மாணவ மாணவிகள் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய 7 பாடங்களுக்கு விடைத்தாள் நகல் வாங்கவும், அனைத்துப் பாடங்களுக்கும் மறுகூட்டல் கோரியும் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்தது.
அரசு தேர்வுகள் துறையின் தலைமை அலுவலகம், அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்கள் மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்களில் நேற்று முதல் விண்ணப்பங்கள் விற்பனை தொடங்கியது.
முதல் நாளான நேற்றே விண்ணப்பங்களை பெற மாணவ மாணவிகளின் கூட்டம் அலைமோதியது. பெரும்பாலான மாணவர்கள் விண்ணப்பங்களை வாங்கி அங்கேயே பூர்த்தி செய்து உடனே சமர்பித்தனர்.
சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள அரசு தேர்வுகள் துறை அலுவலகத்தில் 8 கவுன்டர்களில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான மாணவர்கள் சுமார் 2 மணிநேரத்துக்கு மேலாக வரிசையில் காத்திருந்து விண்ணப்பங்களை பெற்றனர். பெரும்பாலானோர் பெற்றோர்களுடன் வந்திருந்தனர்.
விண்ணப்ப கட்டணத்துகான வரைவோலை எடுப்பதற்காக வங்கிகளிலும் மாணவர்கள் கூட்டம் அலைமோதியது.