ஹர்கிஷன் சுர்ஜீத் உடல்நிலையில் முன்னேற்றம்
டெல்லி: கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜீத் உடல் நிலையில் முன்னேற்றம் தெரிகிறது. அவருக்கு செயற்கை சுவாசக் கருவிகள் அகற்றப்பட்டுவிட்டன.
92 வயதான மூத்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான ஹர்கிஷன் சிங் சுர்ஜீத் மூச்சுத்திணறல் காரணமாக டெல்லி அருகே நொய்டாவில் உள்ள மெட்ரோ இதய சிகிச்சை சிறப்பு மருத்துவமனையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார்.
கடந்த ஒரு வாரகாலமாக கோமா நிலையில் உள்ளார். இந்நிலையில் அவரது உடல்நிலையில் சற்று முன்னேற்றம் காணப்படுவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
அவருக்கு சிகிச்சை அளித்துவரும் டாக்டர் புருஷோத்தம் லால் கூறுகையில், சுர்ஜீத்துக்கு அளிக்கப்பட்டு வந்த செயற்கை சுவாசக் கருவிகள் அகற்றப்பட்டுவிட்டன. தானாகவே அவர் மூச்சு விடத் தொடங்கி உள்ளார்.
அவரது இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம், சிறுநீரக செயல்பாடுகள் அனைத்தும் இயல்பாக உள்ளன. இருப்பினும் அவரது நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகத்தான் உள்ளது என்றார்.
திரிபுரா முதல்வர் மாணிக் சர்கார், சமாஜ்வாதி கட்சித் தலைவர் ராம் கோபால் யாதவ் ஆகியோர் இன்று மருத்துவமனைக்கு வந்து சுர்ஜீத்தின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.
பாஜக மூத்த தலைவர் அத்வானி, டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், கேரள முதல்வர் அச்சுதானந்தன், மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், முன்னாள் அமைச்சர் ஜெய்ப்பால் ரெட்டி உள்ளிட்டோர் நேற்று வந்து நலம் விசாரித்தனர்.












Click it and Unblock the Notifications